ஹஜ்ஜுக்காக விண்ணப்பித்த 3000 பேருக்கு கடிதம் அனுப்பிவைப்பு
இவ்வருட ஹஜ் கடமைக்காக, விண்ணப்பித்தவர்களிலிருந்து 3000 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதை அவர்கள் உறுதிப்படுத்துவதுடன் ஹஜ் வங்கிக் கணக்குக்கு 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்துமாறு வேண்டப்பட்டுள்ளதாகவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹமட் தாஹா சியாத் தெரிவித்தார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
ஹஜ் கடமைக்காக இதுவரை 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த விண்ணப்பங்களில் கடந்த வருடம் ஹஜ் கடமை மேற்கொண்டவர்களின் விண்ணப்பங்களும் உள்ளடங்குகின்றன. அவற்றைத் தவிர்த்து வரிசைக் கிரமப்படி 3000 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
செலுத்தப்படும் பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபா யாத்திரிகர்களின் பயணக் கட்டணத்திலிருந்தும் குறைத்துக் கொள்ளப்படும். ஹஜ் முகவர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ளது.
ஹஜ் முகவர்களின் நியமனத்தின்போதே முகவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் கவனத்திற் கொள்ளப்படும்.
நேர்முகப் பரீட்சை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள ஹஜ் வழிமுறையின் படியே நடத்தப்படும். இதேவேளை, ஹஜ் கோட்டா பகிர்வும் கடந்த வருட பகிர்வின் அடிப்படை யிலேயே முன்னெடுக்கப் படும் என்றார்.


Comments
Post a Comment