தம்புள்ளையில் வர்த்தக நிலையங்கள் பூட்டு
பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோருகிறது ஆணைக்குழு
தம்புள்ளையில் ஏற்பட்ட முறுகலை தடுப்பதற்கு தம்புள்ளைப் பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக அறிக்கை ஒன்றினை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஒருவார காலத்துக்குள் அனுப்பிவைக்குமாறு அதன் செயலாளர் என். ஆரியதாஸ குரே, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வேண்டியுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள NPC/PCID/HO/23/2017 ஆம் இலக்க 2017.03.03 ஆம் திகதியிட்ட கடிதத்தி லேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட விவகாரம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 69 ஆவது கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பான முறைப்பாட்டின் பிரதி உங்களது கவனத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஆராய்ந்து தங்களது அறிக்கையை இக் கடிதம் கிடைத்து ஒருவார காலத்தில் சமர்ப்பிக்கவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் தம்புள்ளையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து பெரும்பான்மை இனத்தவர்கள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை மூடுமாறு அச்சுறுத்தியதை அடுத்து முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் தொடராக மூன்று நாட்கள் மூடப்பட்டன.
இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதை தடுப்பதற்கு தம்புள்ளை பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கடந்த மாதம் 14 ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடொன்றைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment