ஒரு வாரத்­திற்குள் கிழக்கு மாகாண வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு தீர்வு

எம்.எஸ்.எம்.நூர்தீன்
முதலமைச்சரிடம் பிரதமர் உறுதியளிப்பு


ஒரு வாரத்­திற்குள் கிழக்கு மாகாண வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு சாத­க­மான தீர்­வினை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அக­மட்­டிடம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­துள்ளார்.கிழக்கு மாகாண வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள்  தொடர்பில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அலரி மாளி­கையில்  சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார்.



இந்த சந்­திப்பில் கிழக்கு மாகாண பட்­ட­தா­ரிகள் மற்றும் கிழக்கின் ஆளணி வெற்­றி­டங்கள் என  பல விட­யங்கள்  தொடர்பில் ஆரா­யப்­பட்­டன.அத்­துடன் இதன் போது  கிழக்கு  மாகாண பட்­ட­தா­ரி­களின் கோரிக்­கைகள் மற்றும் அவர்­களின் துயர நிலை தொடர்பில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிர­த­ம­ருக்கு விரி­வாக எடுத்­து­ரைத்­துள்ளார்.

கிழக்கு  மாகாண பட்­ட­தா­ரி­களின்  கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரை முத­ல­மைச்சர் பிர­த­ம­ரிடம் நேரில் கைய­ளித்­த ­துடன், கிழக்கு மாகா­ணத்தில் உள்ள வெற்­றி­டங்­களை தற்­போ­துள்ள பட்­ட­தா­ரி­களைக் கொண்டு நிய­மித்து விட்டு ஏனை­யோரை பயிற்சி அடிப்­ப­டையில் உள்­வாங்­கு­வது தொடர்­பிலும் பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்திக் கூறப்­பட்­டது.

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களின் முழு­மை­யான தர­வுகள், விட­ய­தா­னங்கள்  மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள அரச வெற்­றி­டங்கள் ஆகி­ய­வற்றை முழு அறிக்­கை­யாக சமர்ப்­பிக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கிழக்கு முத­ல­மைச்­ச­ருக்கு இதன் போது பணிப்­புரை விடுத்தார்.

இது தொடர்­பான அறிக்­கையை இன்­றைய தினத்­திற்குள் பிர­த­ம­ரிடம் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஊட­கங்­க­ளுக்கு குறிப்­பிட்டார்.அவர் மேலும் தெரி­விக்­கையில்,இந்தப் பிரச்­சி­னையை ஒரு தீவி­ர­மான பிரச்­சி­னை­யாகக் கருதி இந்த வாரத்­திற்குள் ஒரு சாத­க­மான தீர்­வொன்றைப் பெற்றுக் கொடுக்க முழு­மை­யான முயற்­சி­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக பிர­தமர்  உறு­தி­ய­ளித்­ததார்.

அத்­துடன் இது தொடர்­பான விட­யங்கள் குறித்து தொடர்பு கொள்­வ­தற்கு  பிர­தமர் அலு­வ­ல­கத்­தி­லுள்ள சிரேஷ்ட அதி­கா­ரி­யொ­ரு­வரை நிய­மித்­துள்ளார்.கடந்த எட்டு நாட்­க­ளாக வெயில், மழை பாராது  போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரும் கிழக்கு மாகாண பட்­ட­தா­ரி­களை வாக்­கு­று­தி­க­ளுடன் சந்­திப்­பதை விடுத்து சாத­க­மாக தீர்­வொன்­று­டனே நேரில் சந்­திப்­ப­தாக உறுதி பூண்­டி­ருக்­கிறேன். அதன் ஒரு கட்­ட­மா­கவே  பிர­த­மரை சந்­தித்­தேன்.

இத­ன­டிப்­ப­டையில் ஒரு வாரத்­திற்குள் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு சாதகமான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அது மாத்திரமன்றி, கிழக்கில் அரச முதலீடுகளின் ஊடான புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் தொடர்பான யோசனையொன்றும் இதன் போது பிரதமரிடம் முன்வைத்துள்ளேன் என்றார்.

Comments