மேலதிக ஹஜ் கோட்டாவை பெற அமைச்சு நடவடிக்கை
சவூதி அரசாங்கம் வருடாந்தம் வழமையாக இலங்கைக்கு வழங்கிவரும் ஹஜ் கோட்டாவை விட இவ்வருடம் மேலதிக கோட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரச ஹஜ் குழுவின் உறுப்பினரும் அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளருமான எம்.எச்.எம்.பாஹிம் தெரிவித்தார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், கடந்த வருடம் இலங்கைக்கு 2240 ஹஜ் கோட்டாவே கிடைத்தது.
மேலதிக கோட்டாவைப் பெற்றுக் கொள்வதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் மேலதிக கோட்டா கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டிருந்த பலர் ஹஜ் வாய்ப்பினை இழந்தார்கள்.
இவ்வருடம் மேலதிக கோட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போதிலிருந்தே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபிய அரச ஹஜ் அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டாவின் அவசியத்தை அமைச்சர் ஹலீம், சவூதி ஹஜ் அமைச்சரிடம் எடுத்து விளக்கவுள்ளார்.
சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.


Comments
Post a Comment