கிண்ணியா : உயிர் குடிக்கும் டெங்கு...
..
கிண்ணியாவில் அடுத்தடுத்து மரணங்கள் .இதனால் எங்கும் மரண ஓலங்கள். நோயாளர்களால் வைத்தியசாலை நாளாந்தம் நிரம்பி வழிகின்றது. ஒரு கட்டிலில் இருவர் மூவராகப் படுத்து சிகிச்சை பெறுகின்ற காட்சியும், நிலத்தில் பாயை விரித்துப் படுத்து சிகிச்சை பெறுகின்ற காட்சியும் மனித நேயமுள்ள அனைவரையும் கண் கலங்க வைக்கும் நிகழ்வுகளாகும்.
சிறுவர்கள், இளைஞர்கள் பெண்கள், பெரியவர்கள் என்று எவரையும் இந்தக் கொடிய டெங்கு நுளம்பு விட்டு வைக்கவில்லை. மக்கள் எந்த நேரமும் பீதியுடன் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது? அடுத்து யார் மரணிப்பாரோ? இதிலிருந்து விடுதலை பெற முடியாதா? என்ற அச்சத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கிண்ணியா கடந்த காலங்களில் பல அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளது. பயங்கரவாதம், வெள்ளம், சுனாமி போன்றவற்றைக் கண்ட கிண்ணியா மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் சோதனை பாரிய டெங்கு நோயாகும். இதுவும் கிண்ணியா வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மறக்கமுடியாத சோகமாகும்.
இக் கட்டுரை எழுதப்படும் வரை 12 பேரை பலியெடுத்தது மாத்திரமன்றி தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவது மேலும் மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துக் கொண்டிக்கிறது.
செய்வதறியாது மக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.
பெற்றோர்கள், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். இதனால் கிண்ணியா வலயத்தில் உள்ள 66 பாடசாலைகளுக்கு அவசரகால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிலையங்கள், அரபுக் கல்லூரிகள் அனைத்தும் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன. இறைவா கிண்ணியா சமூகத்தை பாதுகாப்பாயாக என்று பள்ளிவாயில்களில் ஐந்து நேரத் தொழுகைளிலும் விஷேட பிரார்த்தனைகள் நடக்கின்றன. இந்த சோதனையிலிருந்து விடுவித்து, எங்களுக்கு நலவைப் பெற்றுத்தா இறைவா என மக்கள் தினமும் பிரார்த்திக்கிறார்கள். நோன்பு நோற்கிறார்கள்.
மறுபக்கம் இந்த டெங்கு காய்ச்சல் ஏன் வந்தது? எப்படி வந்தது? எப்படித்தான் வந்தாலும் இந்தளவு மரணங்கள் நிகழலாமா? இதற்கெல்லாம் பொறுப்புதாரிகள் யாராக இருப்பார்கள்? மக்களா? அல்லது வைத்தியர்களா? அல்லது வைத்தியசாலையா? அல்லது அதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா? அல்லத வேறேதும் காரணங்களா? என்றெல்லாம் மக்களை பல்வேறு தொடர்பாடல் வடிவங்களில் சிந்திக்கவும் பேசவும் வைத்திருக்கின்றது. அந்த வகையில் டெங்கு நோயின் மரணங்கள் குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஏ.ஆர்.எம்.பரீட் (ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்)
கிண்ணியாவின் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கேற்ப வைத்தியசாலைக்கு தேவையான இட வசதிகளும் ஆய்வுகூட வசதிகளும் இங்கு இல்லை. சுனாமி அனர்த்தத்துக்குப் பிறகு புதிய இடத்தில் காணியின் அளவுக்கேற்ப கட்டப்பட்ட வைத்தியசாலைக் கட்டடம்தான் இப்போதும் இருக்கிறது. அதன் பிறகு எந்தவிதமான அபிவிருத்தியும் இங்கு ஏற்படவில்லை. இப்போது இங்கு ஏற்பட்டிருக்கின்ற நிலைமையில் வைத்தியசாலையில் ஆய்வுகூட வசதிகள் பெரிய குறைபாடாக இருக்கின்றது.
வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை நடைபெற்றாலும் நெருக்கடி நிலைமையால் பல நோயாளர்கள் வெளியிலேயே பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில் டெங்கு நோயாளி ஒருவர் பல தடவை இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது.
ஒரு டெங்கு நோயாளி ஓய்வெடுக்க வேண்டும். ஆனால் ஒரு கட்டிலில் இரண்டு, மூன்று பேர் என்று சிகிச்சை பெறுகின்ற நிலைமையில் இவர்களை எவ்வாறு பராமரிப்பது என்பதில் வைத்தியசாலை நிர்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது. இவர்களை பராமரிக்கச் செல்கின்றவர்கள் 24 மணி நேரமும் நிற்க வேண்டியிருக்கின்றது.
கட்டில்கள்,படுக்கைகள், மருந்துகள் என்று உதவிகள் எது வந்தாலும் மரணங்களைக் தடுக்க முடியாதே. மக்களின் தொகைக்கு ஏற்ப வைத்தியசாலைக்கு இட வசதி வேண்டும்.
மௌலவி ஏ.எம்.ஹிதாயத்துல்லா (தலைவர்,கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷூறா)
இது ஒரு பெரிய சனத் தொகைக்கு சொந்தமான ஒரு வைத்தியசாலை. இதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டியது காலத்தின் தேவை. அல்லது இதனை அபிவிருத்தி செய்வதோடு, ஆலங்கேணி, காக்காமுனை, கச்சக்கொடித்தீவு போன்ற பிரதேச வைத்தியசாலைகளை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய வேண்டும்.
தற்போது மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இந்தக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கின்றது. 15 நாட்ளுக்கு மேலாக சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்னும் நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஒரு முறையான வேலைத்திட்டத்தினை அமுல்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இதனைச் செய்வதற்கு அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்த வேண்டும்.
அபூசாலிஹ் ஐயூப்கான் (ஆசிரியர்)
சரியான வைத்தியசாலை முகாமைத்துவம் இல்லாமையே மரணங்களுக்குக் காரணம் என மக்கள் கருதுகின்றனர். எனவே சரியான முகாமைத்துவம் தேவை. இங்கு 24 மணி நேரமும் தியாகத்தோடும் அர்பணிப்போடும் சேவை செய்கின்ற வைத்தியர்களும் இருக்கிறார்கள். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோயாளர்களால் விடுதிகள் நிரம்பி வழிகின்றது.
இந்த நேரத்தில் பிரதேச வைத்தியர்கள் ஓரிரு தினங்களாவது தங்ளது பிரத்தியேக டிஸ்பென்சரிகளை மூடிவிட்டு வார்ட்டுகளுக்குச் சென்று அங்கு மிக கஷ்டத்துக்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்ற வைத்தியர்ளுக்கும் தாதியர்களுக்கும் உதவ முடியும்தானே. அவ்வாறு செய்திருந்தால் நோயாளர்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டிருப்பார்கள். இதன் மூலம் மரணங்களை தவிர்திருக்கலாம் அல்லவா.
உள்ளுர் வைத்தியர்களுக்கு நன்மைகளைச் சம்பாதிக்கின்ற சந்தர்ப்பத்தை இறைவன் கொடுத்திருக்கின்றான். “நாம் இங்கு கஸ்டப்படுகிறோம். ஆனால் அவர்கள் சொந்த மக்களை மறந்து நேரம் வந்தவுடன் போய்விடுகிறார்கள்” என இரண்டு பெரும்பான்மையின வைத்தியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட போது எனது காதில் விழுந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
கடமை நேரத்துக்கு அப்பாலும் ஊர் வைத்தியர்கள் பணிபுரிய வேண்டிய நேரம் இது. ஓரிரு உள்ளூர் வைத்தியர்கள் இந்த தியாகத்தைச் செய்வதை மறக்கமுடியாது. அவர்களுக்கும் இறைவன் அருள்புரிய வேண்டும்.
அடுத்து வைத்தியசாலைக்கு உடனடியாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படல் வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படுபவர் உணர்வுடன் கடமையைச் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது.
எம்.எல். அன்சார் (சமுர்த்தி உத்தியோகத்தர்)
முதலிவதாக 2010 இல் டெங்கு கிண்ணியாவை ஆக்கிரமித்தது. அப்போது 3 மரணங்களோடு ஓரிருவாரங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த நேரம் முறையான வடிகான் அமைப்பு இன்மையே இதற்கு பிரதான காரணம் என சுகாதாரப் பகுதியினரால் இனங்காணப்பட்டது. ஆனால் ஏழு வருடங்களாகியும் எந்தவிதமான பரிகார நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனுடைய விளைவுதான் இந்த மரணங்கள். இப்போதும் காரணம் வடிகான்கள்தான் என்று பேசப்படுகின்றது. அடுத்த வருடம் இன்னும் 20 உயிர்களை பலிகொடுத்த பிறகும் அப்போதும் வடிகானைப் பற்றித்தான் பேசப்படும். ஆகவே மரணங்களுக்கு காரணம் வடிகான்களா ? தீர்மானம் எடுப்பவர்களா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
எச் எம். சமீம் (பிரதேச வைத்திய அதிகாரி)
கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதலாவது டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டார். அன்றிலிருந்து மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரைக்கும் இனங்காணப்பட்ட 1075 நோயாளர்கள் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இதை விட 2 மடங்கு நோயாளர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கிறார்கள்.
சுனாமிக்குப் பின்னர் அவசரத் தேவைக்காக கட்டப்பட்ட இந்த வைத்தியசாலை அதன் பின்னர் தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்டட போதும் ஒரு அங்குலமேனும் கட்டடம் கட்டப்படவில்லை. மிகக் குறைந்தளவு வசதிகளுடனே மிகவும் சிரமத்துக்கு மத்தியில் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு விடுதியில் 12 தொடக்கம் 16 வரையான கட்டில்கள் மத்திரமே இருக்கின்றன.
கிண்ணியாவில் மாத்திரம் 80 ஆயிரம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த கட்டடத்தை வைத்துக் கொண்டு சிறப்பாக சேவையாற்ற முடியாது. இது தவிர பட்டனமும் சூழலும், கந்தளாய், தம்பலாகமம், மூதூர் இறால்குழி பிரதேச மக்களும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
ஒரு நாளைக்கு 1500 பேர் வெளி நோயாளர் பிரிவுக்கு வருகின்றனர்.
இந்த நேரத்தில் ஆளணி, பௌதிக வள பற்றாக்குறைக்கு மத்தியிலும் இரவு பகலாக நாங்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போது இரவு 8 மணி வரைக்கும் வெளி நோயாளர்பிரிவு திறக்கப்பட்டிருக்கிறது. இரத்தப் பரிசோதனை 24 மணி நேரமும் நடைபெறுகின்றது.
இவ்வாறானதொரு அனர்த்தம் நடைபெறும் போது எந்த வைத்தியசாலையாக இருந்தாலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். இருந்தும் இந்த வைத்தியசாலைக்கு இடவசதியை அதிகரிப்பது அவசியமானதொன்றாகும்.
இந்த மாவட்டத்தில் எந்தவொரு வைத்தியசாலையாக இருந்தாலும் தங்களால் ஒரு நோயாளியை பராமரிக்க முடியாத நிலை வரும் போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்குத்தான் அனுப்ப வேண்டும். அதைத்தான் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இது டெங்கு நோயாளர்களுக்கு மாத்திரமல்ல.
ஒரு நாளைக்கு 600 தொடக்கம் 700 டெங்கு நோயாளிகளுக்கு இரத்தப் பரிசோதனை செய்கிறோம். இது மிக அதிகமானது. இந்த நிலையில் மத்திய, மாகாண சுகாதார அமைச்சுக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அடிக்கடி விஜயம் செய்கிறார்கள். இவர்களின் உதவியால் டெங்கு நோயாளர்களைக் கண்காணிப்பதற்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்று இன்னும் மூன்று தினங்களில் அமைக்கப்படவுள்ளது.

Comments
Post a Comment