முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்த மைத்திரி, தமிழர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கும் ரணில்
கண்டி, மாத்தளை மாவட்டங்களில் உள்ள அரச பெருந்தோட்ட காணிகள் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கே வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவது இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமைச்சர்களான கபீர் ஹஷிம், மலிக் சமரவிக்கிரம ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பு குறித்து அமைச்சர் மனோகணேசன் தெரிவிக்கையில்,
பிரதமருடன் நடைபெற்ற பேச்சுகளின் போது தோட்டங்களில் வாழும், இந்நாள், முன்னாள் மலையக தமிழ் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளின் பரப்பளவு தொடர்பான விபரங்களை கண்டறிந்து, வாழ்வாதார காணிகள் அதே தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். இவை வீட்டு திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற 7 பர்சஸ் காணியுடன் தொடர்பில்லாத வாழ்வாதார காணிகளாக கருதப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை பிரதமரிடத்தில் முன்வைத்த போது அவர் அதனை ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் இந்த தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார நோக்கில் காணிகள் பிரித்து கொடுக்கப்படும் தோட்டங்களை அண்மித்து வாழும் கிராமத்தவர்களுக்கும் காணிகள் பகிர்ந்து வழங்கப்படும். அதேபோல் காணிகள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரதமர் உறுதிபடக் குறிப்பிட்டார் என்றார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால வில்பத்து சரணாலய வனப்பிரதேசத்திற்கு வடக்கே முஸ்லிம்களுக்கு சொந்தமான வெப்பல், கரடிக்குளி, மரிச்சிக்கட்டி ஆகிய பிரதேசங்களையும் தேசிய வனப்பிரதேசங்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment