பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை!
அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக சலுகை விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கமைய குறிப்பிட்ட பெண் அரசு அலுவலர் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சிகிச்சை பெறும் வகையில் ஒரு வருடத்திற்கு சம்பளமற்ற விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும்.
அரசு முகாமைத்துவம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகமானது, சகல அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது.
மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் பேரில் இந்த சலுகை விடுமுறையை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையில் மகப்பேறின்மை காரணமாக நாட்டிற்கு வெளியே சிகிச்சை பெற விரும்பும் பெண்களில் அநேகமானோர் குறிப்பாக இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள தமிழ் நாட்டில் சிகிச்சை பெறுவதையே விரும்புகின்றனர்.
பொதுவாக மகப்பேறின்மை காரணமாக சிகிச்சை பெறும் பெண் அரச அலுவலகர்களுக்கு இந்த விடுமுறை பயனுள்ளதாக அமைவதால் பல்வேறு தரப்பும் வரவேற்றுள்ளன.


Comments
Post a Comment