‘நாய்களை’ கைவிடுவோரைக் கண்காணிக்க CCTV :பைசர்


தெரு நாய்களை,  பொது இடங்களில் விட்டுச் செல்கின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன்,  இவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும்,  எமது அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கால் நடைகள் மற்றும் தெரு நாய்கள் நலன்புரி அமைப்பின் ஆலோசனைக் குழுவுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சரினால் இக் குழுவுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி உள்ளிட்ட நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது;

தெரு நாய்களை வீதிகளில் அல்லது பொது இடங்களில் கொண்டு வந்து விடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  இதையும் மீறும் பட்சத்தில் ஆறு மாத கால சிறைத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களின் நடவடிக்கைகளை துள்ளியமாகக் கண்டுபிடிப்பதற்கு, சீ.சீ.ரீ.வி. கெமராக்களைப் பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கெமராக்கள் பாதுகாப்பாக, மறைமுகமாக பொது இடங்களில் பொருத்தப்படும்.

இதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும். இத்திட்டம், மிக அவசரமாக அமுல்படுத்தப்படும்.  நான் தெரு நாய்களைக் கொல்லத் திட்டம் தீட்டுவதாக, சமூக வலைத் தளங்களில் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர். யார் எதைச் சொன்னாலும், சமூகத்துக்கு என ஆற்றவேண்டிய மிகப் பாரிய பொறுப்பும்,  கடப்பாடும் எனக்கு உள்ளது.

இன்று, வைத்திய சாலைகள், பாடசாலைகள், கடைத் தெருக்கள், சந்தைக் கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் தெரு நாய்களினால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில், இதற்கு உடனடியாக நடவடிக்கைகள்   எடுக்கப்படல் வேண்டும் என்பதே, என்னுடைய பிரதான நோக்கமும், குறிக்கோளுமாகும்.

நாம் ஒருபோதும் தெரு நாய்களைக் கொல்லத் திட்டமிடவில்லை. அவற்றுக்கான பாதுகாப்பை வழங்கவும், பொது மக்களை அவைகளிலிருந்து காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவுமே, இவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு  வருகின்றோம். இது தவிர, தெரு நாய்களைப் பிடித்து, பராமரிப்பு நிலையங்களில் பாதுகாப்பாக ஒப்படைக்க, அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

Comments