மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு : உயிரிழந்தோர் தொகை 26 ஆக உயர்வடைவு
மீட்புப் பணி தொடர்கிறது
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
5 சிறுவர்கள், 9 பெண்கள் உள்ளிட்ட 26 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 7 பேர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் மீட்கப்பட்ட 26 சடலங்களில் 5 சடலங்கள் தொடர்ந்தும் அடையாளம் காண்பதற்காக பொலிஸ் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குப்பை மேடு சரிந்ததில், அதன் அருகில் இருந்த வீடுகளுக்குள் இருந்தவர்கள் மண், குப்பை மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மீரியபெத்த மண் சரிவின் போது மீட்புப் பணிகளை முன்னெடுத்த இராணுவ விஷேட படையணிக்கு கட்டளை அதிகாரியாக செயற்பட்ட மேல் மாகாணத்துக்கு பொறுப்பான இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் கீழ் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்றன.
மீட்புப் பணிகளில் மேஜர் ஜெனரல் சுதத் ரணசிங்கவின் வழி நடத்தலின் கீழ் சுமார் 600 வரையிலான முப்படை வீரர்களும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர்வின் நேரடி மேற்பார்வையில் மேல் மாகாணத்துக்கு பொருப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் விஷேட பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளை தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய 150 வரையிலான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளனர். அத்துடன் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகப்டர்கள் 2 உம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனை விட இந்த குப்பை மேடு சரிவு அன்ர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் தொடர்ந்து கொலன்னாவ டெரன்ஸ் என் சில்வா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்ப்ட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உலர் உணவு உள்ளிட்ட வசதிகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் வழங்கப்ப்ட்டு வருகின்றன.
இந் நிலையில் நேற்று முன் தினம் சரிவுப் பகுதியினை ஆய்வு செய்த பேராதணை பல்கலைக்கழக புவியல் தொடர்பிலான 10 பேர் கொன்ட விஷேட குழு, தேசிய கட்டிட ஆய்வு மையம் மற்றும் சுரங்க, அகழ்வாராய்ச்சி மையத்தின் பரிந்துரைக்கு அமைய, மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்த பகுதியில் வசிக்கும் 125 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன.
தொடர்ச்சியாக குப்பை மேட்டில் சரிவுகள் இடம்பெற வாய்ப்புள்ளதால் இவ்வாறு அவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குப்பை மேடு சரிவு காரணமாக மீதொட்டமுல்லவின் நாகஹமுல்ல வீதி, தஹம் புர, மிரிகே வத்த மற்றும் 23 ஆம் தோட்டம் ஆகிய பகுதிலில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் அப்பிரதேசத்தின் நீர் விநியோக கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நீரானது நிரம்பியுள்ள நிலையில் அவை குப்பை மேட்டின் அடிப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதால் மேலும் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கட்டிட ஆய்வுமைய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்தே இவர்கள் பாதுகபபான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளதாக அறிய முடிகிறது.
புத்தாண்டு தினமான கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் மீதொட்டமுல்ல குப்பை மேடானது பாரிய சத்ததுடன் அதன் அருகே இருந்த வீடுகள் மீது சரிந்திருந்தது. இதனால் சுமார் 400 மீற்றர் பகுதி 40 அடிவரையில் புதைந்து போயுள்ளது.
இந் நிலையிலேயே அதனுள் புதையுண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நேற்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்ப்ட்டது.
அனர்த்தம் சம்பவிக்கும் போது, எத்தனை பேர் வீடுகளில் இருந்தார்கள் என்பது தொடர்பில் சரியான தகவல்கள் இல்லாததன் காரணமாக மேலும் எத்தனை பேர் மண்ணுக்குள் புதையுன்டு காணாமல் போயுள்ளனர் என்பதை சரியாக கூர முடியாதுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் சார்பில் பேசவல்ல இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.
எந்த தரப்பிடமிருந்தும் புதையுன்டுள்ளவர்கள் அல்லது காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சரியான எண்ணிக்கை மற்ரும் தகவல்கள் தமக்கு கிடைக்காததால் இந் நிலைமை தொடர்வதாகவும் பாதிக்கப்ப்ட்டவர்களில் உய்டிருடன் மீன்டவர்கள் தம்முடன் யாரெல்லம் வீட்டில் இருந்தனர், யாரையெல்லாம் காணவில்லை என்பதை தெளிவாக கூறுவார்களயின் அதனை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் கேசரியிடம் கருத்து தெரிவித்த மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி நுவன் போப்பகே, குறைந்தது 22 பேர் வரை தற்போதைய சூழலில் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக நம்புவதாக குறிப்பிட்டார்.
எனினும் அதனை சரியாக கூர முடியாது என சுட்டிக்காட்டிய அவர் தமது தகவல்களுக்கு அமையவே அந்த எண்ணிக்கை கணிக்கப்ப்ட்டுள்ளதாகவும் புது வருடம் என்பதால் வீடுகளில் இருந்த உரவினர்கள் போன்ரோர் தொடர்பிலும் அவதானம்ச் செலுத்தப்படல் வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே நேற்று முன் தினம் பேராதனை பல்கலையின் புவியல் தொடர்பிலான சிரப்பு குழுவும் தேசிய கட்டிட ஆய்வு மையம் உள்ளிட்ட நிருவனங்களின் தலைவர்களும் மீதொட்ட முல்ல குப்பை மேட்டு பகுதிக்கு விஜயம் செய்து நிலவரத்தை ஆராய்ந்தனர்.
இந் நிலையில் நேற்று முன் தினம் சரிவுக்கு உள்ளான மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார கேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார்.
' குப்பை மேட்டின் ஒரு பகுதியில் இருந்த பள்ளத்தில் தொடர்ச்சியாக குப்பைகள் நிரப்பட்டுள்ளன.
இந் நாட்களில் நிலவிய மழையுடன் கூடிய கால நிலைக்கு மத்தியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதன் போது, மேட்டின் மறு புற கீழ்ப் பகுதியானது மேல் நோக்கி உயர்ந்துள்ளது. இவ்வாறு உயர்ந்த பகுதியில் காணப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களும் அதனுடன் சேர்ந்து உயர்ந்துள்ளன.
பின்னர் அந்த உயர்ந்த பகுதியானது சரிந்துள்ளது. இதனையே எம்மால் அவதனைக்க முடிந்தது என தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று அனர்த்தம் ஏற்பட்டு சுமார் 10 மணி நேரத்தின் பின்னரேயே மீட்புப் பணிகளுக்குரிய வசதிகள் கிடைத்ததாகவும் அதற்கு உட்பட்ட நேரத்தில் பொலிஸாரும் பொது மக்களும் இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
குரிப்பாக மண் அள்ளுவதற்கு தேவையான ட்ரெக்டர்கள் அல்லது லொரிகள், எக்ஸினேற்ரர்கள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் பல மணி நேரம் கழித்தே அவை கிடைத்ததாகவும், உடனடியாக கிடைத்திருப்பின் மேலும் சிலரை உயிருடன் மீட்டிருக்கலாம் எனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எவ்வாறாயினும் மீட்புப் பணிகளுக்கு முப்படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையில், இன்றும் அந் நடவடிக்கைகள் தொடர்வுள்ளன.
இந்த குப்பை மேடு சரிவு காரணமாக மரணித்துள்ள 26 பேரில் 11 பேரின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன. ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மகள் மறு மகளின் மகள் உள்ளிட்ட நால்வரின் இறுதி கிரியைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரின் இறுதிக் கிரியையும் இவ்வாறு இடம்பெற்றன.
முன்னதாக நேற்று முன் தினம் இந்த அனர்த்ததில் உயிரிழந்த முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தன.
கொழும்பு மா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளின் குப்பைகள் புளூமெண்டல் பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டதையடுத்து 2008 ஆம் ஆண்டு மீதொடமுல்லையில் குப்பைக் கொட்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இந் நிலையில் ஒரு நாளைக்கு 8 டொன் வரையில் குப்பைகள் மீதொட்ட முல்லையில் கொட்டப்படுவதுடன் சுமார் 300 அடி வரையில் குப்பை மேடானது வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் 2 ஏக்கர்களுக்கு உட்பட்டு கொட்டப்பட்டு வந்த குப்பைகளானது தற்போது 20 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து குப்பை மேடான பரந்துள்ளது.
தற்போது சரிவுக்கு உட்பட்டுள்ள மீதொட்டமுல்லை குப்பை மேட்டு பகுதியானது முன்னைய வயல் பகுதியாகும். ' பொத்துவில் வயல்' என அழைக்கப்படும் இப்பகுதியானது 1989 ஆம் ஆண்டு கொழும்பை அழிவுக்கு உட்படுத்திய வெள்ளப் பெருக்கு காரணமாக கடுமையாக சேதமடைந்த பகுதியாகும்.
அதன் பின்னர் அப்பகுதியை நிரப்பி முல்லேரியா நகர சபையானது கொலன்னாவை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்த பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளின் குப்பைகளை மட்டும் கொட்ட ஆரம்பித்துள்ளன. குப்பைக்கு மேலால் மண்ணை போட்டு நிரப்பி குப்பைகளை கொட்டும் முறைமை ஆரம்பத்தில் அமுல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே புளூமெண்டல் பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மா நகர சபை பகுதிக்கு உட்பட்ட அனைத்து குப்பைகளும் மீதொட்ட முல்ல குப்பை மேட்டில் கொட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்ப்ட்டது.
தற்போது 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு மலை போல் காட்சி தரும் நிலையில், அதனை அண்டிய பகுதியில் மட்டும் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்டு 30 ஆயிரம் பேர் வரை வசிப்பது சுட்டிக்காட்டத்தக்கது.


Comments
Post a Comment