இறக்காமம்: உணவு விஷமானதில் மூவர் மரணம்; பலர் வைத்தியசாலையில்

(சப்னி அஹமட்)

உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 600ற்கும் அதிகமான மக்கள் சுகயீனமுற்ற நிலைமையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களே பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்கள் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு வைத்திய சிகிச்சைகளை பெற்றுவருகின்ற அதேவேளை, அவர்களுக்கான சகல வைத்திய சிகிச்சைளையும், அவர்களுக்கு தேவையான வைத்திய மருந்து வகைகளையும் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் நேரடியாக விஜயம் மேற்கொண்டு ஏற்பாடு செய்துள்ளார்.


மேலும், குறித்த வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்ததினை தீவிரமாக கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் உடனடியாக ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்து 30ற்கும் மேற்பட்ட வைத்தியர்களும் தாதியர்களும் வரவழைக்கப்பட்டு தற்போது தீவிரமாக நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஜமீல் காரியப்பர் தெரிவித்தார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மூன்று கற்பிணித்தாய்மார்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


Comments