மீதொட்டமுல்ல அனர்த்தம்: முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை
மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) முற்பகல் விசேட பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடர் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் அரச அதிகாரிகள், முப்படை தளபதிகள் ,பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சம்பவ இடத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மீனவல தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது மூன்று நாட்களுக்கு ஒருதடவை இது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன் பிரகாரமே இன்றைய தினம் இந்த விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இதேவேளை இடம்பெயர்ந்துள்ளவர்களுக்காக சாலமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தில் புதிய வீடுகளை பெற்று கொடுப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில குடிசைகளில வாழும் நபர்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொலன்னாவ சாலமுல்ல பகுதியில் 60 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் தேவைகருதி மீதொட்டமுல்ல சம்பவத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த வீடுகளை பெற்று கொடுப்பதாக
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் காலாநிதி ஜகாத்முனசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் மேலும் 200 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மீதொட்டமுல்ல பகுதியில குப்பை மேட்டின் ஒருபகுதி சரிந்து வீழ்ந்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபபட்டு வருகின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான செனவிரத்ன தெரிவிததுள்ளார்.


Comments
Post a Comment