சிரியாவின் அழுகைச் சூட்டில் குளிர்காயும் இஸ்ரேல்

“சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்கள் ஐ எஸ் போன்ற அமைப்புகளின் கைகளில் வீழ்ந்து விடக்கூடாது .அவ்வாறு வீழ்ச்சி காணும் பட்சத்தில் அமெரிக்காவோ அல்லது அமெரிக்காவின் நேச நாடுகளோ தாக்கப்படலாம் ” கூறியது வேறு யாருமல்ல . அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் .

நேற்று  நடைபெற்ற ஜீ 7 மாநாட்டில் வைத்து ரஷ்யா மீது எந்த பொருளாதார தடையையும் விதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதை அடுத்து  மேற்படி அதை அவர் தெரிவித்துள்ளார் .  டில்லர்சன் கூறிய ‘நேச நாடுகள்’ என்பதில் அதிகம் அடங்குவதற்கு மெத்தப்  பொருத்தமான நாடு இஸ்ரேல் தான் .

அண்மைக்காலமாக சிரியாவை மையப்படுத்தி செய்யப்படுகிற ஒவ்வொரு  சர்வதேச சமாதான முயற்சிகளும், ஒப்பந்தங்களும் ,பேச்சுவார்த்தைகளும்  இஸ்ரேலின் நலனுக்காக செய்யப்படுகிறதா என்கிற கேள்விகளை ஏற்படுத்தியுள்ளன .

சமீபத்தில் சிரியாவின்  சைரட் விமான தளம்  மீது  நடத்தப்பட்ட தாக்குதல் கூட சிரியாவின் இரசாயண ஆயுதங்கள் இஸ்லாமிய போராட்ட குழுக்களிடம் சென்று விடக்கூடாது அதனால் பாதிக்கப்படுவது இஸ்ரேல் தான் என்கிற தொணியில் நடத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .  கான் ஷெய்க்கூன் பகுதியில்  இரசாயணத்  தாக்குதல் இடம்பெற்றதை மறைக்க  மருத்துவ மனை மீது  தாக்குதல் நடத்திய ரஷ்யா என்கிற ஒரு யுத்தக்குற்றவாளி தண்டிக்கப்படாமல் தடைகள் விதிக்கப்படாமல் இருப்பது உலக நியதியை , ஐ நா சபையை , ஜி 7 ஐ சந்தி சிரிக்க வைத்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் சிரிய யுத்தம் தீவிரம் கண்டிருந்த போது அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் , சிரியாவில் உள்ள இரசாயண ஆயுதங்கள் ஐ நா கண்காணிப்பில் அழிக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு  சிரிய அரசுடன் வந்திருந்தது . அதன்படி தம்மிடம் உள்ள அனைத்து  இரசாயண ஆயுதங்கள் அழிக்கப்பட்ட தாக சிரியா கூறிய போது ரஷ்யாவும் அதை ஊர்ஜிதப்படுத்தியது .  அண்டை நாடான இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அப்பாவி சிரிய உயிர்களை பலி கொடுக்க ஐ நாவும் சர்வதேச அமைப்புகளும் அந்த உடன்பாட்டுக்கு வந்த போது ரஷ்யாவுக்கு படுகொலைகளை செய்ய அது பச்சைக்கொடியை காட்டியிருந்தது .

சிரியா தொடர்ச்சியான படுகொலைகளை சந்தித்த போதும் கண்டன அறிக்கைகளோடு அவை காலம் கடத்தப்பட்டிருந்தன. சிரியாவின் அசாத்தை ஆட்சி மாற்றுவதில் தனக்கு எந்த அபிலாசையும் இல்லை என்றும் சிரியாவில் போராடுகிற எல்லா அமைப்புகளுமே பயங்கர வாத அமைப்புக்கள் என்றும் சிரியாவின் உள்நாட்டு விடயத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறிவந்த டொனால்ட் ட்ரம்ப் இப்போது மட்டும் அவரது நிலைப்பாட்டை ஏன் மாற்றினார்?

இரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட்டதை அடுத்து  இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என்று தப்புக்கணக்கு போட்டிருந்தது அமெரிக்கா .

ஆனால் சிரியாவினால் நடத்தப்பட்ட இராசயன தாக்குதலை அடுத்து இன்னமுமே இரசாயண ஆயுதங்களை சிரியா வைத்திருப்பதை உணர்ந்துள்ள அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்பு கருதி களத்தில் குதித்துள்ளது. சமீபத்தில்  நடத்தப்பட்ட சிரியாவின் இரசாயண தாக்குதலை அடுத்தான அமெரிக்க தாக்குதல் ‘நேச நாட்டின் ‘ பாதுகாப்பு குறித்து ,நேச நாட்டில் உள்ள குழந்தைகளின் நிலை பற்றி ஏற்படுத்திய கவலையின் வெளிப்பாடே தவிர சிரியாவின் அப்பாவி பொதுமக்கள் மீதுள்ள அக்கறை அல்ல .

பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி ,இரசாயன ஆயுதம்  பற்றி வேதம் ஓதுகின்ற இதே அமெரிக்கா, சில வாரங்களுக்கு முன்னர் ஈராக்கின்   மொஸுல் நகரில் 250 பொதுமக்களை கொன்று குவித்திருந்தது .

பொதுமக்களின் உயிரில் கரிசனை காட்டுவதாக பாசாங்கு பண்ணுகிற இதே அமெரிக்கா இரத்தக்கறை கொண்ட இந்த ஈராக்கிய யுத்த வரலாற்றுக்கு முகவுரை எழுதி இருந்ததை வரலாறு மறைக்காது .

ஆக மொத்தத்தில் சிரியாவை அழ வைத்து அதன் வெப்பத்தில் இஸ்ரேல் குளிர் காய வைக்கப்படுகிறது என்பது மட்டுமே உண்மை . எது எப்படியோ சிரிய நெருக்கடி  நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் தீர்க்க தரிசனப்படி இறுதி நாள் வரை எரிந்து கொண்டேதான் இருக்கும் .

-முஹம்மது ராஜி

Comments