அனுமதி கிடைத்தவுடன் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க தயார் – கிழக்கு முதல்வர்


ihzana fareed

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மாகாண சபையால் எடுக்கப்பட்டு அது தொடர்பான விவரங்களை மத்திய அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அத்திணைக்களத்திடமிருந்து எழுத்து மூலமான அனுமதி கிடைத்தவுடன் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவித்தபோது, அனைத்து மாகாணங்களிலும் வேலையற்ற பட்டதாரிகளுடைய பிரச்சினை காணப்படுகின்றது. எனினும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் எமது கோரிக்கையை ஏற்றுச் சாதகமான பதில் வழங்கியுள்ளனர்.

அரசாங்க நிர்வாகத்திலுள்ள சில நடைமுறைகளுக்கு அமைய எமக்கான அனுமதியை முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம் எழுத்து மூலம் வழங்க வேண்டும் என்பதுடன் அதற்காக நாம் காத்திருக்கின்றோம்.

மேலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வயதெல்லையை 40 இலிருந்து 45ஆக அதிகரிக்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் கோரியிருந்தனர். இது தொடர்பில் மாகாண ஆளுநரின் உதவியை நாம் பெறவுள்ளோம் என்றார்.

Comments