ஹக்கீம் தனது கையாலாகா தன்மையை உலகுக்கு பறை சாற்றியுள்ளார் – உலமா கட்சி
இறக்காமம் மாயக்கல்லி விகாரை அமைத்தல் சம்பந்தமாக தலையிடும்படி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண ஆளுனரை கேட்டிருப்பதன் மூலம் ஹக்கீம் தனது கையாலாகா தன்மையை உலகுக்கு பறை சாற்றியமைக்காக உலமா கட்சி அவரை பாராட்டுகிறது என கிண்டலடித்துள்ளார் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்.
இது பற்றி அவர் தெரிவித்ததாவது.
அம்பாரை மாவட்டம் என்பது முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டுமே பாராளுமன்ற உறுப்பினரைக்கொண்ட பிரதேசமாகும். அத்துடன் இறக்காமமும் 90 வீதம் முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்கும் பிரதேசமாகும். இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் அங்கு வெள்ளோட்டமாக சிலை வைக்கப்பட்ட போதே அதனை நீக்கியிருக்க வேண்டும். இதனை அரசின் அமைச்சராகவும் ஐ தே கவின் கலகெதர அமைப்பாளராகவும் பிரதமர் ரணிலின் மிக மிக நம்பிக்கைக்குரியவரான ஹக்கீமினால் மிக இலகுவாக செய்திருக்க முடியும். ஆனால் பிரதமரிடம் எத்தகைய உத்தரவும் பெறாமல் ஒரு வாரத்தில் சிலை அகற்றப்படும் என பிரதமர் தெரிவித்ததாக மக்களிடம் சொல்லி ஹக்கீம் ஆசுவாசப்படுத்தினார்.
வழமையாகவே முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்றுக்கு பழகிப்போன முஸ்லிம்கள் இதனை நம்பி மீண்டும் ஏமாந்தார்கள். ஏமாறுவதில் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் உலக சாதனை படைத்தவர்கள்.
இலட்சக்கணக்கான முஸ்லிம்களின் வாக்குகளை கையில் வைத்துக்கொண்டு பல அமைச்சுக்கள் பல பதவிகளையும் வைத்துக்கொண்டு தனியார் காணி ஒன்றில் அத்துமீறி வைக்கப்பட்ட சிலையை நீக்க முடியாமை என்பது முஸ்லிம்களின் அரசியல் பலவீனத்தை காட்டுகிறது.
ஒரு பிரச்சினையின் வீச்சை குறைக்க இன்னொரு பிரச்சினையை பெரிதாக்குவது போல் சிலை வைக்கப்பட்ட பிரச்சினையை சிறிதாக்குவதற்காக விகாரை கட்டுவித்தலை மேற்கொண்டுள்ளனர். எதிர் காலத்தில் இந்த அரசை வீட்டுக்கனுப்ப எமக்கு வாக்களியுங்கள் என மு. கா தலைவர் சொல்வார். முஸ்லிம்களும் வழமை போல் அவர்களுக்கு வாக்களிப்பர். பின்னர் பதவிக்கும் பணத்துக்கும் வாக்குகளை விற்று விட்டு நடையை கட்டுவர்.
முஸ்லிம்கள் தமது வாக்குகளை பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத வேறு கட்சிகளின் பக்கம் திருப்ப முயலாதவரை இன்னும் பல ஏமாற்றங்களையே அடைய முடியும்.


Comments
Post a Comment