நாட்டில் புலிகளை விட, மோசமான தீவிரவாதம் - மேதினக் கூட்டம் அரசை கவிழ்ப்பதாக அமையவேண்டும்


தற்போது இந்த நாட்டில் நடைபெறுவது ஜனநாயகம் இல்லை, தீவிரவாதம். இந்த தீவிரவாதம் புலிகளை விடவும் மோசமானது என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -28- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தற்போது சரத் பொன்சேகாவிடம் இராணுவ பதவி ஒன்றை ஏற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கையை விடுத்துள்ளார். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதை ஜனநாயகம் என்று கூற முடியாது. தீவிரவாதம் என்றே கூறவேண்டும். இதற்கு முன்னரும் நாம் பல தடவைகள் இதை தெரிவித்துள்ளோம். இந்த தீவிரவாதம் விடுதலைப்புலிகளை விட மோசமானது.

இதை உருவாக்குபவர்கள் ரணிலின் கீழ் இருக்கும் பொலிஸ் மற்றும் நீதிச் சேவைகள் எனவும் குற்றம் சுமத்தினார்.

மேலும் எதிர்கால செயற்றிட்டத்தையும் ஐக்கிய தேசியக்கட்சியுடனேயே முன்னெடுக்க உத்தேசித்துள்ளார்கள். இது மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கவின் திட்டம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டை பாதுகாத்துக் கொடுத்த இராணுவத்தை இந்த அரசாங்கம் தண்டிக்கின்றது. சிறையில் அடைத்து துன்புறுத்துகின்றது.

நேற்று ஒரு தாய் தனது 1 1/2 மாதக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு 4 வயது குழந்தையுடன் கல்கமுவவில் இருந்து கொழும்பிற்கு முச்சக்கர வண்டியில் வந்தார். 8000 ரூபா பணம் முச்சக்கர வண்டிக்கு செலுத்தி வந்து தனது கணவரை சந்தித்துள்ளார். நாட்டை பாதுகாத்த இராணுவத்தின் குடும்பத்தினரை இந்த நிலைமையில் வைத்திருப்பதாகவும் தேரர் அரசாங்கத்தை சாடினார்.

தொடர்ந்து, எதிர்வரும் மேதினக் கூட்டமானது அரசை கவிழ்க்கும் செயற்றிட்டமாக அமையவேண்டும் என்றும் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

Comments