சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறினால் கடும் நடவடிக்கை
மஹிந்தவுக்கும் அதேகதி என்கிறார் துமிந்த
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் தீர்மானத்தை மீறும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இந்த நியதியே என்பதை மறந்துவிடக்கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்கும் நகர்வுகளை மஹிந்த ராஜபக் ஷவே மேற்கொண்டு வருகின்றார் எனவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தை நடத்த கட்சி அனைத்து விதத்திலும் தயாராகியுள்ளது. கண்டிக்கு செல்லும் சகல வீதிகளிலும் கட்சியின் பேரணி வந்து பிரதான இரண்டு பேரணியுடன் இணைந்து பிற்பகல் இரண்டு மணிக்கு கண்டி கெட்டம்பே மைதானத்தில் மே தின கூட்டம் இடம்பெறும். உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றுகொடுத்த பங்கு எமக்கே உள்ளது. மக்களின் நிலைமைகளை உணர்ந்து தொழிலாளர் நலனுக்காக செயற்படும் கட்சியாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தில் அதிகளவில் தொழிலாளர் நலன்கள் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கண்டியில் தான் உள்ளது. கொழும்பில் காலி முகத்திடலில் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனக் கூறிக்கொண்டு செயற்படுவதால் அது எமது கூட்டமாகிவிடாது.
கடந்த முறையை விடவும் அதிகளவில் மக்களை இணைத்து எமது சாதனையை நாமே முறியடித்து எமது பலத்தை காட்டுவோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்து செயற்படும் 20 க்கும் அதிகமான கட்சிகள் இம்முறை எம்மோடு இணைத்துகொள்ளவுள்ளன. அதேபோல் அரச, தனியார் பேருந்துகள் உரிய பணம் செலுத்தி கொண்டுவரப்படவுள்ளன. இப்போது வரையில் 2000ஆயிரம் அரச பேருந்துகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எமது பலத்தை வெளிப்படுத்தும் மே தினத்தை நாம் இம்முறை செய்து காட்டுவோம். அதற்காக யாரையும் பழிவாங்கும் வகையில் நாம் எதையும் மேற்கொள்ள மாட்டோம்.
அனைவரதும் சுதந்திரத்துடன் நாமும் இணைந்து செயற்படவே விரும்புகின்றோம். ஆகவே எமது பக்கம் சரியான நகர்வுகள் உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைவருக்கும் ஒரே கட்சி சட்டம் செயற்படும். மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேறு சட்டமும் ஏனையவர்களுக்கு வெறும் சட்டமும் என செயற்படுத்த முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த மே தின கூட்டம் தொடர்பில் கலந்துகொள்ள வேண்டும் என எழுத்துமூலம் அறிவித்துள்ளோம். அதேபோல் கலந்துகொள்ளாது நிராகரிக்கும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். கட்சியின் கொள்கையை மீறி செயற்படும் நபர்களுக்கு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றார்.


Comments
Post a Comment