விழுங்கப்படும் நமது பூர்வீகம்
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்களை விழுங்கி ஏப்பமிடுகின்ற பௌத்த பேரினவாதத்தின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. இந்த முயற்சிகளுக்கு இறுதியாகப் பலியாகியிருப்பதே இறக்காமம் பிரதேசமாகும்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அதனை குறிப்பிட்டதொரு காலத்தில் சிங்கள பெரும்பான்மை மாவட்டமாக மாற்றியமைக்கின்ற திட்டம் கடந்த பல தசாப்தங்களுக்கு முன்னரே வரையப்பட்டதாகும். அந்த திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான முயற்சிகள் வரலாற்றில் தொடராக இடம்பெற்று வந்துள்ளன.
கரும்புச் செய்கை என்ற பெயரில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டமை, தீகவாபி திட்டத்தின் கீழ் காணிகள் அபகரிக்கப்பட்டமை, தொல்பொருள் வலயங்கள் எனும் போர்வையில் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டமை, தமிழ் முஸ்லிம் பகுதிகளில் சிலை வைக்கப்பட்டமை என இத் திட்டங்கள் பல்வேறு படிமுறைகளைக் கொண்டிருந்தன. அதன் மற்றொரு அங்கமாகவே தற்போது இறக்காமம், மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைக்கும் நோக்கில் முஸ்லிம்களின் காணிகள் பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களின் பின்னணியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின அமைச்சர் ஒருவர் இருக்கின்ற நிலையில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரும் இதில் கைகோர்த்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிகாரிகள் அடங்கலாக ஞானசார தேரரரும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றுள்ளமையும் அங்கு அவர் ஆக்ரோஷமாக இனவாத கருத்துக்களைப் பேசியமையும் நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் விகாரைகளை அமைக்கப் போவதாக கூறியுள்ளமையும் அவரது செயற்பாடுகளுக்கு அரசாங்க அனுசரணை கிடைத்துள்ளதை வெளிப்படுத்தி நிற்கிறது.
கிழக்கு மாகாண சபையில் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியுள்ள நிலையிலும் அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்கின்ற நிலையிலும் அவர்களைப் புறந்தள்ளி, அரசாங்க அதிபர், காணி ஆணையாளர், பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் இனவாத தேரர்களுடன் கலந்துரையாடி முஸ்லிம்களின் காணிகளை பலவந்தமாக அபகரிப்பதானது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் பகல் கொள்ளையுமாகும்.
இந்த செயற்பாட்டுக்கு ஒருபோதும் முஸ்லிம்கள் தரப்பில் அனுமதி வழங்கக் கூடாது என்பதே அனைவரதும் நிலைப்பாடாகும். அந்த வகையில் இதற்கெதிராக முஸ்லிம் சமூகத்திலிருந்து பலமான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதன்பொருட்டு இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ள அமைதிப் பேரணிகளில் அனைவரும் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இதற்கப்பால் இந்த பாரதூரமான ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும். குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இதுவிடயத்தில் தமது கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.
துரதிஷ்டவசமாக முஸ்லிம் அரசியலில் நிலவும் போட்டி அரசியல் காரணமாக எந்தவொரு பொதுப் பிரச்சினையிலும் ஒன்றுபட்டுச் செயற்படமுடியாத நிலை தோன்றியுள்ளது. முசலி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தரப்புகளுக்கிடையில் நடந்த குழப்பம் இதனையே வெளிப்படுத்தி நிற்கிறது.
நமது மக்களின் பூர்வீக நிலத்தை மீட்கின்ற செயற்பாடுகளில் கூட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் செயற்படாது கட்சி அரசியலையே முன்னெடுப்பார்களாயின் இவர்களிடமிருந்து சமூகம் எவ்வாறு தீர்வை எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த மோசமான அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை முஸ்லிம் சமூகத்தின் பூர்வீகம் இனவாதிகளால் விழுங்கி ஏப்பம் விடப்படுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது போய்விடும்.


Comments
Post a Comment