21 முஸ்லிம்கள் பாராளுமன்றத்தில் இருந்தும், பலமற்றவர்களாக உள்ளோம் - ஹிஸ்புல்லாஹ் கவலை


முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சுப் பதவிகளும் அனைத்து சலுகைகளும் உள்ளதாகவும், அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டார்.

கஹட்டோவிட்டாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையில் இடம்பெற்ற சியனே மீடியா வட்டத்தின் ஊடக செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் சமூகத்திலிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தோம். அதேபிரச்சினை இன்றும் தொடர்கின்றன. இன்று 21 முஸ்லிம்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர். ஆனால் பிரச்சினையொன்றை முன்வைத்து தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள பலமற்றவர்களாக உள்ளோம்.

முஸ்லிம் அமைச்சர்களுக்கு கார், பாதுகாப்பு உட்பட ஏனைய சகல சலுகைகளும் உள்ளன. ஆனால், இருக்க வேண்டிய அதிகாரத்தை மாத்திரம் இழந்திருக்கின்றோம். இந்த அதிகாரம் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஏற்படும் ஒற்றுமையினால் மாத்திரமே கிடைக்கப் பெறும்.

முஸ்லிம்கள் இன்று அரசியலிலும், மார்க்க சிந்தனா ரீதியிலும் ஒற்றுமையிழந்து காணப்படுகின்றனர். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் கலையப்படாதவரையில் இந்த அதிகாரம் எம்மை வந்தடையாது.

பிரதமர் யாழ்ப்பாணம் சென்ற போது வடக்கு மக்களின் பிரச்சினைகளை இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் தீர்த்து வைப்பேன் எனக் கூறியுள்ளார். இருப்பினும், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து இதுவரை ஓரிரு வரிகளையேனும் அரசாங்கம் முன்வைக்காதுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை வெளியிட்டார்.

Comments