பாதிக்கப்பட்டோருக்கு உதவ விசேட திட்டம்
உலமா சபை, பள்ளிவாசல்கள் சம்மேளனம் நடவடிக்கை
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் திட்டங்களை வகுத்துள்ளது.
இந்த திட்டங்களை உடனடியாக அமுல்படுத்துவதற்கு சமூகத்திலுள்ள தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் சம்மேளனத்துக்கு குறிப்பாக நிதி மற்றும் அன்பளிப்புகளை வழங்குமாறு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கேட்போர் கூடத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உலமா சபையின் கிளைகளின் ஒத்துழைப்புடன் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ஆறு மாவட்டங்களில் தற்போது உலமா சபையின் கிளைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தை 12 பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவை கொள்ளுப்பிட்டி, தெஹிவளை, கல்கிசை, கிருலப்பனை, கொம்பனித்தெரு, மருதானை, தெமட்டகொட, அளுத்கட, கிராண்ட்பாஸ், கொழும்பு வடக்கு, கொலன்னாவ, புறக்கோட்டை, மாளிகாவத்தை என்பனவாகும்.
பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 6 மாவட்டங்கள் 12 பள்ளிவாசல்கள் சம்மேளனங்களிடம் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் குறிப்பிட்ட மாவட்டங்களின் உலமா சபையினருடன் ஒன்றிணைந்து மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் உதவிகளையும் வழங்கவுள்ளன.
26 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள தெஹிவளை – கல்கிசை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மாத்தறை மாவட்டத்துக்கும், 14 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் 10 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள தெமட்டகொட பள்ளிவாசல்கள் சம்மேளனங்களுக்கு கேகாலை மாவட்டமும் 11 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்துக்கு இரத்தினபுரி மாவட்டமும் தலா 10 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள மாளிகாவத்தை மற்றும் கொம்பனித்தெரு பள்ளிவாசல்கள் சம்மேளனங்களுக்கு கம்பஹா மாவட்டமும் தலா 12 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள புறக்கோட்டை மற்றும் அளுத்கட பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள் 9 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள மருதானை பள்ளிவாசல் சம்மேளனம், 26 பள்ளிவாசல்களை உள்ளடக்கியுள்ள கொழும்பு வடக்கு பள்ளிவாசல் சம்மேளனம் என்பவற்றுக்கு கொலன்னாவ பகுதியும் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “அநேகமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
நீர் வடிந்தோடிய பின்பு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வீடுகள் துப்புரவு செய்யப்படவேண்டியுள்ளதுடன், உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
இந்தப் பணிகளில் உலமா சபையும் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்படும் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு டாக்டர்கள், உளவியலாளர்கள் என்போரும் முன்வந்துள்ளனர்” என்றார்.


Comments
Post a Comment