அறபு தெரிந்த மௌலவிமாரை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் – உலமா கட்சி
அறபு தெரிந்த மௌலவிமாரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் மட்டுமே இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை முஸ்லிம் நாடுகள் மயப்படுத்த முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது
தமிழ் மக்களுக்கு தனியான நாடு இல்லாத நிலையிலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது பிரச்சினைகளுக்கு சார்பாக ஐரோப்பிய நாடுகளை கொண்டிருக்கும் போது 47 முஸ்லிம் நாடுகளை பின் புலமாகக்கொண்ட இலங்கை முஸ்லிம்களால் ஏன் தம் பிரச்சினையை இந்நாடுகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை என பலரும் கேட்கிறார்கள்.
இக்கேள்விக்கான பதிலை கடந்த பத்து வருடங்களாக நாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். உலமா கட்சியின் ஸ்தாபகத்தின் பிரதான நோக்கங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதனை ஜீரணிக்கும் பண்பு, அறிவு முஸ்லிம் சமூகத்திடம் இல்லை.
47 முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன என்றால் அவற்றில் பெரும்பாலானவை அறபு மொழி பேசும் நாடுகளாகும். ஏனைய நாடுகளில் அறபு முக்கியமான மொழியாகும். இலங்கையை பொறுத்த வரை இன்று வரை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்களாக ஆங்கில அறிவுள்ளோரையே நாம் தெரிவு செய்கின்றோம். அவர்களையே பாராளுமன்றத்துக்கும் அனுப்புகின்றோம். அவர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு போகும் போது பெப்பெப்பே என இருந்து விட்டுத்தான் வர முடியும். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் அங்கு ஆங்கிலம் பேசினாலும் அரசியல், ஊடகம், பொது மக்கள் என அனைவரிடமும் தொடர்பு ஏற்படுத்த முடியாது.
பொதுவாக எந்த நாடாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறப்புரிமை கொடுக்கும். இந்த வகையில்தான் அறபு தெரியாத எம். எச். முஹம்மதை மக்காவின் ராபித்தாவின் இலங்கை பிரதிநிதியாக ராபித்தா நியமித்தது. அதே போல் அறபு தெரியாத அஷ்ரபை லிபியாவின் இஸ்லாமிய அழைப்பு மையம் பிரதிநிதியாக்கியது. இவர்கள் அங்கு பேசும் போது மொழி பெயர்ப்பாளர் இன்றி பேச முடியாது. மொழி பெயர்த்து பேசும் போது அதில் உணர்வு இருக்காது.
அதே வேளை ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் கல்விமான்களுக்கு ஆங்கிலம் தெரியும். அவர்கள் அவர்களின் மொழியில் தம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.
பொதுவாக எந்த நாடாக இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதிகளாக பார்க்கும். நமது நாட்டின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் தமிழ் மக்கள் தம் பிரச்சினைகளை சர்வதேச மக்கள் மயப்படுத்துகிறார்கள். பா. உறுப்பினரின் உரையே மீடியாக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
ஆகவே நமது பிரச்சினைகளை முஸ்லிம் நாடுகள் கூட தெரிந்து வைக்காமைக்கான பிரதான காரணம் அறபு மொழி தெரிந்த, இஸ்லாமிய மார்க்கத்துடன் சம்பந்தப்பட்ட மக்கள் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி இல்லாமையாகும். இதன் காரணமாகவே உலமா கட்சியை ஆரம்பித்து செயற்பட்டு வருகிறோம்.
கடந்த வருடம் சவூதியில் நடைபெற்ற சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டுக்கு நான் சவூதி அரச அழைப்பை ஏற்று போனபோது அந்த விமானத்தில் எம். எச். முஹம்மத், அமைச்சர் பௌசி ஆகியோரும் வந்திருந்தனர். எம் அனைவரையும் விமானம் வரை தனியான கார் கொண்டு வந்து ஏற்றிச்சென்றார்கள். பொது மக்கள் செல்லும் வழியில் இல்லாமல் அரச பரம்பரைக்கான வாசலால் அழைத்து சென்றார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் மக்கள் செல்வாக்கில்லாத கட்சித்தலைவராக இருக்கும் போதே இப்படி என்றால் மக்கள் செல்வாக்குள்ள மௌலவியான அறபு மொழி தெரிந்த அரசியல் தலைவராக இருந்தால் எத்தனையோ சாதிக்க முடியும் என்பதை கண்டேன்.
எனவேதான் சொல்கிறேன். இலங்கை முஸ்லிம்கள் இனியும் அலட்சியமாக இருக்காமல் அறபு மொழியும் அரசியல் அறிவும், சமூக உணர்வும் உள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முயல வேண்டும். நமது பிரச்சினைகளை முஸ்லிம் நாடுகள் மயப்படுத்த வேண்டுமாயின் இது தவிர வேறு வழி இல்லை.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி

Comments
Post a Comment