விரைவில் ஞானசார தேரர் 'உள்ளே' போக நேரிடலாம்! தொடரும் அமைதியின்மையில் அவதானமாக நடந்து கொள்வோம்.

எஸ். ஹமீத்-

தன் மீதான விசாரணைக்காக நாளை திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வருவதாக முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஞானசார தேரர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு அவர் பொலிஸ் நிலையத்துக்குச் செல்வாராயின் அவர் மீதான புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படலாம். அல்லது மாஜிஸ்திரேட் ஒருவரின் முன்னால் ஆஜர் படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அவரது சகாக்கள் உட்பட இனவாதக்  கூலிப் பட்டாளங்கள் முஸ்லிம்களுக்கெதிரான பாரிய வன்செயல்களில் இறங்கக் கூடிய சாத்தியக்கூறுகளே பெருமளவில் காணப்படுகின்றன. எனவே, முஸ்லிம் சமூகம் மிக்க அவதானமாக நடந்து கொள்வது அவசியமாகும்.

ஒருவேளை தான் பொலிஸாருக்கு  வாக்களித்தது போல ஞானசார பொலிஸ் நிலையத்துக்குச் செல்லாதிருந்தால் அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடலாம். அவ்வாறு அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தாலும் அவரது அடிவருடிகளும் மற்றும் நாட்டில் இரத்த ஆறொன்றை ஓடச் செய்து அதன் மூலம் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் கலவரமென்ற பெயரில் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் விஷமிகளும் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடிய நிலைமைகளும் காணப்படுகின்றன.

எனவே, அவ்வாறான ஒரு சூழலில் பொது மக்களை-குறிப்பாக-முஸ்லிம் மக்களைப்  பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னேற்பாடாகச் செய்து கொள்ள வேண்டி அரசாங்கத்தை இப்போதே வலியுறுத்த வேண்டியது நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கடமையாகும்.

ஒருவேளை நாளை ஞானசார தேரர் நாளைக்குக் கைது செய்யப்படாவிட்டால், எதிர்வரும் 24 ம் திகதி புதன்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காகச் செல்லும்  ஞானசாரருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றி உறுதியான கருத்துச் சொல்லுவது முடியாது-கூடாது-என்ற போதிலும் ஓர் ஊகத்தின் அடிப்படையில் இதனை நாம் எதிர்பார்க்கலாம். அவ்வாறு நிகழுமாயின், அது முஸ்லிம் விரோத செயற்பாட்டுக்காகவன்றி நீதிமன்ற அவமதிப்புக் காரணமாகவே ஞானசாரர் தண்டனை பெற்றார் என்பதனை அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சிங்கள மக்களிடம் எடுத்துச் சொல்வது மிக அவசியமாகும். அதற்கான முன் ஆயத்தங்களிலும் நமது முஸ்லிம் தலைமைகள் இப்போதிருந்தே அக்கறை செலுத்தினால் மிகவும் நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதாவது, இந்தப்  பதற்றமான சூழ்நிலையிலாவது முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் இந்த விடயத்தில் தமக்கிடையிலான அத்தனை வேற்றுமைகளையும் மறந்து ஒரேயணியில் சமூகத்துக்காக ஒன்றுபட்டு இயங்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பாகும்!

Comments