பெளத்த தந்திரத்துக்குள் மாயக்கல்லி
கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு ஒருமுறை உபதேசிக்கும் போது ஒருவர் புத்த தர்மங்களை முழுவதும் கற்று மிக உரக்க ஓதி உபதேசித்தாலும் அவர் அச்சூத்திரங்கள் கூறுகிறபடி நடக்கவில்லையானால், பிறருடைய பசுக்களைக் கணக்கெண்ணிக் கொண்டிருக்கும் இடையனையொப்ப, துறவிகள் அடைய வேணடிய பலனை அவர் அடையமாட்டார் என்றார்.
பசுக்களை கணக்கெண்ணிக் கொண்டிருக்கும் இடையனைப் போன்ற துறவிகள் பௌத்த மதத்தின் பெயரால் மாயக்கல்லி விவகாரத்தில் வலம் வருவதனை பார்க்கின்ற போது கௌதம புத்தர் இருந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுவதனை தவிர்க்க முடியாது.
இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்ட சிலை விவகாரம் தேசிய அரசியலில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. உண்மையான, கௌதம புத்தரை அடியொட்டி பின்பற்றுவோரால் இவை அரங்கேற்றப்படவில்லை என்பதை கௌதம புத்தரின் போதனைகளை வாசிக்கும் போது கண்டுகொள்ளவும் முடிகின்றது.
வணங்குவதற்கு யாருமற்ற ஒரு மலையுச்சியில் 2016.10.29 ஆம் திகதி சிலை வைக்கப்பட்டது. பின்பு மடாலயம் ஒன்றை நிர்மாணிப்பதுக்கு பல்வேறு முயற்சிகள் திரை மறைவில் அரங்கேற்றப்பட்டு மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தப்பட்டும் வந்தது. வைக்கப்பட்ட சிலையை அகற்றும் விடயம் தொடர்பாக அரசியல்வாதிகளினால் இறக்காமம் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்பது காற்றில் கரைந்தாற்போல் ஆயிற்று.
இறக்காமம் மாயக்கல்லி விவகாரத்தில் பூனைக்கு மணி கட்டுவது யார் என்கின்ற கேள்வியுடனே ஒரு சாரார் வலம் வரத் தொடங்கினர். பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொள்ள முடியாது என்கின்ற தோரணையில் வலம் வந்தனர் இன்னுமொரு சாரார். சமூக நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள் மௌனம் காத்தன. மலையை அண்டிய தனியார் காணிகளை கையகப்படுத்தி மடாலயம் அமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை அபரிமிதமானது. அந்த நடவடிக்கை என்பது காலம் தாழ்த்தி செய்யப்பட்ட ஒன்றாகினும் வரவேற்கத்தக்க ஒரு விடயமே.
மாயக்கல்லி மலை, காணி மீட்புக் குழு என்ற ஒன்றை நிறுவி அதனூடாக அத்தனை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு செயலாளராக இறக்காமத்தை பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி பாறுக் சாஹிப் செயலாற்றுகின்றார்.
இவ்விடயம் தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்படும். நடவடிக்கைகள் தொடர்பாக சட்டத்தரணி பாறுக் சாஹிப் தெரிவிக்கையில், மாயக்கல்லி மலையடிவாரத்தில் மடாலயம் கட்ட அனுமதிப்பது என்பது இறக்காமம் பிரதேசத்தை சிங்களப் பேரினவாதத்துக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு சமம். இந்த நடவடிக்கை அரசியலுக்கு அப்பால் நின்று நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடிப் பெற்றுத் தரவேண்டிய முதற் பணி என்றார்.
மாயக்கல்லி மீட்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு கட்சி பேதங்களை மறந்து அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல முழு இலங்கை வாழ் முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். ஒத்துழைக்காமல் ஓரத்தில் நின்றுகொண்டால் இன்னும் ஐந்து அல்லது பத்துவருடங்களில் பேரினவாதம் அம்பாறை மாவட்டத்தை முழுமையாக ஆக்கிரமிப்புச் செய்யும் என்றார்.
மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டு ஆறுமாதங்களாகிவிட்டன. நடவடிக்கைகள் மந்தகதியில் இருந்தமைக்கு காரணம் வினவினோம். அதற்கு சட்டத்தரணி பாறுக் சாஹிப் சொன்ன விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சமூக உணர்வாளர்களை தற்காலத்தில் காண்பது அரிது என்றார். அதிகமானோர் தானும் தனது பாடும் என்று இருந்துவிடுகின்றனர்.
இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல. இது சமூகப் போராட்டம். இதில் பார்வையாளர்களாக இருந்துவிட்டுச் செல்ல முடியாது. மாயக்கல்லி மலை மீட்பு பணியில் தங்களது உயிர் போனாலும் பரவாயில்லை, என்கின்ற இறை நம்பிக்கையோடுதான் இந்தக் குழு களத்தில் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து இது தொடர்பான சட்டரீதியான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்பின்னர் ஆட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார் சட்டத்தரணி பாறுக்.
சிலை வைக்கப்பட்டுள்ள மாயக்கல்லி மலை 2014.10.10 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தொல்பொருள் திணைக்களத்துக்கு கையளிக்கப்படுகின்றது. இந்த மலையை சுற்றி 24 பேருக்கு 1990.08.30ஆம் திகதி காணி கட்டளை அபிவிருத்திச் சட்ட உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இக்காணிகளை தவிர்த்தே தொல்பொருள் திணைக்களத்துக்கு வர்த்தமானி அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தொல்பொருள் திணைக்களம், காணிச் சொந்தக்காரர்கள் இருக்கத்தக்க மூன்றாம் நபர்கள் அதுவும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து சிலை வைப்பது என்பது மிக்க ஆபத்தான விடயமே. நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ள வேளையில் பௌத்த துறவிகள் அத்துமீறி தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது நீதித்துறையை அலட்சியம் செய்யும் ஒரு விடயமாகவே பார்க்கப்படல் வேண்டும். இந்த நிலை ஆபத்து மிக்கது.
இறக்காமம் மாயக்கல்லி விவகாரம் என்பது சாதரணமானதல்ல. இதனை சரியாகப் புரிந்து கொள்வது அரசியல்வாதிகளின் கடமை. இதனுடைய ஆழ அகலம் என்பது வித்தியாசமான ஒன்று. இந்த உபாயங்களுக்கு எதிர் உபாயங்களை வகுக்கக் கூடியவர்களாகவே நமது அரசியற் தலைவர்கள் செயற்படுதல் வேண்டும். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தர் ஐயாவை இணைத்துக்கொண்டு ஸ்ரீல.மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஹக்கீம் ஜனாதிபதியைச் சந்தித்து, தொளிவுபடுத்தியதாகவும் சாதகமான பதில் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஜனாதிபதி என்ன சொன்னார். சிலை அகற்றப்படுமா அல்லது மடாலயம் நிர்மாணிக்கப்படாதா என்கின்ற உத்தரவாதம் பெறப்பட்டதா என்கின்ற கேள்விகளுக்கு பதில் இன்னுமில்லாமலுள்ளது.
நல்லாட்சி அரசை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் என்கின்றோம். ஆனால் இறக்காமம் மாயக்கல்லி சிலை விவகாரத்துக்கு ஒரு வாரத்துக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் என்று சொல்லி ஆறுமாதங்கள் கடந்து விட்டன. அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.
இறக்காமம் மாயக்கல்லி விவகாரமாக அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை கடந்த வெள்ளிக்கிழமை நடாத்தியிருந்தனர்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளை ஆராய மாகாண சபை குழுவொன்றினை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இக்குழுவின் முடிவுக்கு முன்னர் ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்வது யாப்பிற்கு முரண் என்றும் அவ்வாறு யாராவது நடந்துகொண்டால் சட்டம் அவ்வாறானவர்களை தண்டிக்கும் என்றார்.
முதலமைச்சரின் சொந்த மாவட்டமான மட்டக்களப்புக்கு பொதுபல சேனாவினுடைய பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வருகை தருவதை நீதிமன்றம் தடை செய்தது. அதற்கான தடையுத்தரவும் ஞானசாரருடைய கையில் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு பொலிஸ் உயர் அதிகாரிகளின் கண்முன்னே கிழித்து வீசியுமிருந்தார். அதற்கு இந்த நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் என்ன? இதனை பாடமாகக் கொள்வது இவ்விடத்தில் பொருத்தமாகவிருக்கும். ஏனெனில், அதே ஞானசாரரின் விஜயமே இங்கு அச்சத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் வெசாக் தினத்தினை மாயக்கல்லி மலையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஞானசாரா தனது சீடர்களுக்கு உத்தரவிட்டுச் சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலைமைகளில் நமது அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை தவிர்த்து உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்தல் வேண்டும்.
அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தை ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் பகிஷ்கரிக்க வேண்டும். மாயக்கல்லி விவகாரத்துக்கு தீர்வு கிடைக்க அதிகாரத்திலுள்ள கிழக்கு மாகாண சபையின் அமர்வுகளை காலவரையறையின்றி ஒத்திவைத்தல் வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் மாத்திரமே இந்த அரசாங்கத்துக்கு செல்லுபடியானதாக அமையும். இல்லையேல் இறக்காமம் மாயக்கல்லியில் ஏலவே தனித்திருந்த புத்தரோடு சீடர்கள் என்று நம்பியுள்ள இடையர்களின் ஆக்கிரமிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவிடும்.


Comments
Post a Comment