எந்தவொரு தேர்தலுக்கும் சவாலுக்கும் நாம் தயார்
மேதின உரையில் பிரதமர் ரணில் சூளுரை
இந்த வருடத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு தேர்தலுக்கும், சவால்களுக்கும் முகம்கொடுக்க தயாராகவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பிரதான கூட்டம் நேற்று பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன் இந்த வருடம் எந்த தேர்தலை நடத்தினாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என துணிவுடன் கூறலாம். எமது வெற்றி ஊர்ஜிதமாகி விட்டது.
2016 ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக கூறினர்.
எனினும் தற்போது 2016 ஆம் ஆண்டு முடிவடைந்து விட்டது. அவர்கள் ஆட்சியில் உள்ளார்களா? இல்லையே. தற்போது இந்த ஆட்சியை வெசாக் போயா தினத்தின் பின்னர் கவிழ்ப்பதாக கூறுகின்றனர். நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். இரு தசாப்தங்கள் சென்றாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினருக்கு ஆட்சிக்கு வரமுடியாது.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முடியாமல் போனது. இதன்காரணமாகவே அவர் தேர்தலை நடத்தினார்.
தற்போது நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றோம். ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை எமக்கு மீள கிடைக்கபெற்றுள்ளது. முன்னைய ஆட்சி இருந்திருந்தால் இந்த சலுகை கிடைத்திருக்காது. இந்த நிவாரணம் மூலம் 6600 விதமான பொருட்களை நாம் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம்.
அத்துடன் கடந்த மாதம் என்னுடைய வெளிநாட்டு விஜயங்களில் ஊடாக நாட்டிற்கு பல இலாபங்கள் கிடைக்கபெற்றுள்ளன. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளோம்.
இதன்மூலம் கொழும்பு நகரம், கண்டி நகரம், கொழும்பு துறைமுகம் வடக்கே புதிய துறைமுகம் நிர்மாணித்தல், திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.
மேலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பிரதான தடையாக இருப்பது நாட்டின் கடனாகும். 2018 ஆம் ஆண்டு மாத்திரம் 96 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது.
2020 ஆகும் போது 1500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும். எனினும் நாம் கடன் சுமையை குறைத்து கொண்டு தொழிற்சாலைகளை ஆரம்பித்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்றார்.


Comments
Post a Comment