முஸ்லிம் காங்கிரசால் பௌத்த இனவாதம் விழித்துக்கொண்டது – உலமா கட்சி
பௌத்த மதம் அகிம்சையை போதிக்கும் மதம் என்பதும் இப்படி அடக்கு முறைகளுக்காக புத்தர் சிலை வைக்க கூடாது என்பது பௌத்த சமய தலைவர்கள் அறியாத விடயமல்ல.
ஒரு காலத்தில் பௌத்த சமயம் அரசியலாக்கப்படவில்லை. சரியோ பிழையோ அரசியல் வேறு சமயம் வேறு என்ற கோணத்திலேயே பார்க்கப்பட்டது. பௌத்த சமயத்தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவது அவமானதாக கருதப்பட்டது.
ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு அதன் யாப்பு குர் ஆன் ஹதீத் என மக்கள் முன் பொய்யான மாயையை உருவாக்கியது முதலே பௌத்த இனவாதிகள் விழித்துக்கொண்டனர். அத்தோடு நின்று விடாமல் ஹக்கீம் தலைவராக பொறுப்பேற்ற பின் சந்திரிக்கா அரசாங்கம் அவரது விலக்கல் காரணமாக வீழ்த்தப்பட்ட போது, எங்களால் அரசை உருவாக்கவும் முடியும் வீழ்த்தவும் முடியும் என முஸ்லிம் காங்கிரசால் வீறாப்பு பேசப்பட்ட போது பௌத்த இனவாதம் விழித்துக்கொண்டது.
இதன் காரணமாக ஹெல உறுமய என்ற அமைப்பு அரசியல் கட்சியாக தோற்றம் பெற்றது. கொழும்பில் ஆயிரம் சிலைகளை திறப்பதே எமது இலக்கு என்ற கோஷத்தை முன் வைத்து தேர்தலில் குதித்தார்கள். எந்தவொரு தேர்தல் தொகுதியிலும் வெல்லாத நிலையில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றனர்.
அதன்பின் சிலைகளை கொழும்பில் வைக்கும் முயற்சியில் இறங்கினர். டெக்னிக்கல் சந்தியில் உள்ள சிலை, தெமெட்டகொட வீதி சந்தியில் உள்ள சிலை பல சிலைகள் தோற்றம் பெற்றன. இந்த காலகட்டத்தில் அதாவது 2005ல் உருவான உலமா கட்சி இதே மாதிரியான நுட்பங்களை முஸ்லிம் மக்களுக்கு அறிவித்தது.
அதாவது, முக்கியமான இடங்களில் சிறிய பள்ளிகளை கட்டுதல், பள்ளி கட்ட இடமில்லாத இடங்களில் மினாரா ஒன்றையாவது கட்டி அவ்விடத்தில் ஒரு உண்டியலை வைத்து அந்த பகுதியை நமது பகுதி என்பதற்கான அடையாளப்படுத்தல், கிழக்கில் குடிமக்கள் வாழும் பகுதிக்கப்பால் தூரமாக உள்ள முஸ்லிம்களின் காணிகளில் பள்ளிவாயல்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை அறிவித்தது. ஆனால் முஸ்லிம் சமூகம் எதையும் வந்த பின்பே யோசிக்கும் சமூகம் என்பதால் உலமா கட்சியின் கருத்தை நையாண்டி பண்ணியது.
அதன் பின் பௌத்த இனவாத அரசியல் பிரதான ஒன்றாக இலங்கையில் உருவெடுத்தது. பௌத்த சமய தலைவர்களின் தலைமையில் அரசியல் கட்சிகள் உருவாகின. பலர் பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என சென்றனர்.
சமய இனவாதம் சிங்கள மக்களிடையே மிக இலகுவாக சென்றடைந்ததால் இனவாதத்தின் மூலமே தமது இருப்பை தக்க வைக்க முடியும் என்பதை பெரும்பான்மை இன கட்சிகளும் உணரத்தொடங்கின.
இதே வேளை முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்களை விதைக்க இஸ்ரேல் போன்ற நாடுகளும் நமது நாட்டில் பணம் செலவு செய்து பலரது மூளைகளை சலவை செய்தனர். இஸ்ரேலிய அத்து மீறிய குடியேற்றங்களால் பலஸ்தீனர்களின் காணிகளை பறித்தது போல் சிலைகளை காணிகள் பறிக்கும் உத்தியாக பாவிக்கின்றனர்.
இவற்றுக்கு என்ன தீர்வு?
இத்தகைய நிலைகளை மாற்றுவதற்காக உலமா கட்சி அவ்வப்போது பல தீர்வுகளை முன் வைத்து முஸ்லிம்களுக்கு அறிவூட்டியுள்ளது. ஆனால் அவற்றை முஸ்லிம் சமூகம் அசட்டை செய்து வருவதால் நாளுக்கு நாள் துன்பங்கள் வருகின்றன. உலமா கட்சி என்பது மக்கள் அதிகாரம் இல்லாத கட்சி என்பதால் அதன் கருத்துக்கள் ஓரம் கட்டப்படுகின்றன. உலமாக்களும் முஸ்லிம்களும் விழிப்புணர்வு பெற்று உலமா கட்சியுடன் ஒற்றுமைப்பட்டால் நிச்சயம் பல மாற்றங்களை கொண்டு வர முடியும்.
– மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி


Comments
Post a Comment