காலம் தாழ்த்துவது ஆரோக்கியமல்ல
மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென 44 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை கடந்த வாரம் தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தனர்.
மைத்திரிபால சிறிசேனவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்தும் வழிவகைகள் ஏற்பட்டுள்ளதால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டே இந்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இம் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் நடாத்தப்படவிருந்த பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவொன்று கிடைக்குமென்ற நம்பிக்கையிலேயே மேற்படி வாக்குறுதியை அரசியல் தலைவர்களும் சிவில் பிரமுகர்களும் மறிச்சுக்கட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களிடம் முன்வைத்திருந்தனர்.
எனினும் குறிப்பிட்ட திகதியில் இச் சந்திப்பு நடைபெறவில்லை. இன்னும் ஓரிரு தினங்களுக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களுக்குச் சாதகமான முடிவுகள் எட்டப்படுவதை உறுதிப்படுத்துவது மேற்படி அரசியல் மற்றும் சிவில் தலைமைகளின் கடப்பாடு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஜனாதிபதியின் மேற்படி வர்த்தமானி பிரகடனமானது மிகவும் பாரதூரமான விடயமாகும். இது அப்பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்களின் குடியுரிமையைப் பறிக்கின்ற செயலாகும். முஸ்லிம்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஒரு ஜனாதிபதி இவ்வாறு முஸ்லிம்களின் பூர்வீக உரிமையைப் பறிக்கின்ற செயலில் மிகத் தெளிவாக ஈடுபட்டிருக்கின்றமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இறுதியாக நடந்த அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, வனப் பரிபாலனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென தான் விடுத்த பணிப்புரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், மக்கள் வாழும் பகுதிகளை அவ்வாறு வர்த்தனிமாயில் பிரகடனப்படுத்துமாறு தான் உத்தரவிடவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
அவ்வாறெனில் அதனை இரத்துச் செய்து மக்களின் வாழிடங்களை உள்ளடக்காத வகையில் வர்த்தமானியை திருத்தி வெளியிடுவதற்கு ஜனாதிபதியும் அவரது செயலாளரும் இவ்வளவு காலம் இழுத்தடிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அம் மக்கள் போராட்டம் நடத்தியும் அதனை அரசாங்க உயர் மட்டம் கருத்திற் கொள்ளவில்லை. எனினும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாக முஸ்லிம் அமைச்சர்களும் சிவில் தலைமைகளும் கூறிய வார்த்தைகளை நம்பியே தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதன் பிறகும் அம் மக்களை ஏமாற்றும் வகையில் ஜனாதிபதியோ அரசாங்க அதிகாரிகளோ செயற்படக் கூடாது. அதேபோன்று தமது அரசியல் நலன்களுக்காகவும் வாக்கு வங்கிகளுக்காகவும் இந்த விவகாரத்தை கிடப்பில் போடவோ போராட்டங்களை திசை திருப்பவோ எவரும் முனையக் கூடாது என்பதையும் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரதும் பொறுப்பு என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.


Comments
Post a Comment