முஸ்லிம்களின் தலையில் வைக்கும் தீ தேசத்தின் தேகத்தில் இடும் தீயாகும்.
முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்
நெருப்பு ஆயுதத்தை உபயோகித்து பௌத்த சிங்கள வெஞ்சினக் குழுக்கள் முஸ்லிம் மக்களின் மார்க்கம், மஸ்ஜித் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது 2013 இல் தொடங்கிய ஒருதலைப்பட்ச யுத்தம் இன்று வரை ஏறுமுகத்தில் தொடர்கிறது.
முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்து உயிரை உறிஞ்சி, வரலாறு காணாத வகையில் சிங்கள- முஸ்லிம் கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் வடகிழக்கிற்கு வெளியில் வாழ்ந்து வரும் மூன்றிலிரண்டு வீத முஸ்லிம்களை ஏற்கனவே நிலப்பற்றாக்குறையினால் அல்லலுறும் கிழக்கின் முஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதிக்குத் துரத்தியடிக்கும் வாய்ப்பு ஒன்றையும், தக்க தருணத்தையும் முஸ்லிம்களே ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தரகர்கள் காத்திருக்கிறார்கள் என்று கணிக்க முடிகிறது.
ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளிலும், வரலாற்று அனுபவத்திலும் இலங்கை முஸ்லிம்கள் உணர்ச்சி வேகம் கூடியவர்கள் என்பதையும், அச்ச உளவியல் அமையப் பெற்றவர்கள் என்பதையும் இத்திட்டத்தின் ஊக்கிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவேதான், கலவரத்துக்கான காரணர்களாக முஸ்லிம் இளைஞர்களை நிரூபிக்க முடியும் என்று நம்புகிறார்கள். முஸ்லிம் சமூகத்துக்கு மார்க்க விடயங்களில் உணர்ச்சி வேகமும், வியாபார விடயங்களில் அச்ச உளவியலும் தவிர்க்க முடியாத அம்சங்களேயாகும்.
இவ்வாறான கலவரம் ஒன்றை ஏற்படுத்த முடியுமானால் அது முஸ்லிம்களை மட்டுமல்ல முழு இலங்கையையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.
இந்த குத்தகைக்கு அமர்த்தப்பட்டுள்ள "ஒப்பந்தவாதக்" குழுக்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கை அடையாமல் ஓயமாட்டார்கள் போல் தோன்றுகிறது. 9/11இற்குப் பிந்திய பாதுகாப்பும், பொருளாதாரமும் ஒருங்கமைந்த உலக ஒழுங்கின் அடிப்படையில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவ அமைவு புதிய வடிவெடுத்துள்ளது.
இதனைக் கணக்கில் எடுத்துள்ள வெளிச் சக்திகள் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வல்லமை நமது அரசுக்குக் கிடையாது.
நிகழ்வு காலத்தில் இலங்கையை ஆள்கின்ற இரண்டு கட்சிகளில் ஒன்று தனது நாட்டை ஆழும் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தனது சொந்த மக்களில் தங்கியிருப்பதிலும் பார்க்க, சர்வதேச சக்திகள் அவற்றின் இந்து மாக்கடல் பிராந்திய நலன் சார்ந்து வகுக்கும் உபாயங்களுடனும், நிகழ்ச்சி நிரலுடனும் ஒத்துப் போவதை வழக்கமாகக் கொண்ட கட்சியாகும்.
மற்றையது இலங்கையின் பெருந்தேசிய உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டு, பௌத்த சிங்களவர்களின் நலன் பேணுவதன் மூலம் நாட்டை ஆழும் அளவுக்கு வாக்குகளை வசூலித்துக்கொள்ள முடியும் என நம்புகின்ற கட்சியாகும். முஸ்லிம்களை வன்முறைக்கு இரையாக்கும் நாசகாரத் திட்டம் வெளியாரின் உபாயமாக இருந்தால், இத்திட்டத்தை முறியடிப்பதற்கு ஆளும் கட்சிகளில் ஒன்று எவ்விதக் கரிசனையும் கொள்ளாது, எஜமான விசுவாசத்தைக் காட்டுவதிலேதான் கண்ணாயிருக்கும்.
இந்த முஸ்லிம் விரோதத் திட்டத்திற்கு பௌத்த சிங்களப் பெரும்பான்மை வாசனை பூசப்பட்டிருப்பதால் கூட்டரசின் மற்றைய பங்காளிக் கட்சியும் தன்னைக் காத்துக் கொள்வதற்கே அன்றி முஸ்லிம்களைக் காப்பாற்ற முனையாது.
மேற்சொன்ன இரு கட்சிகளினதும் நிலைப்பாடு காரணமாகத்தான் ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதைத் தவிர்த்து அமைச்சர் சாகல ரத்னாயக்காவின் கம்பத்துக்குள் பந்தை உதைத்து விட்டு வெளிநாடுகளுக்குப் பறக்கிறார்கள்.
முஸ்லிம்கள் மீது சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் தொட்டு இருந்து வருகிற வியாபார வெறுப்பு மட்டும் போதாது, புதிய உலக அளவில் வியாபித்து வருகிற இஸ்லாமிய மத வெறுப்பையும் சேர்த்து இலங்கையில் தீக்கங்குகளாக கக்கினால்தான் கலவரத்துக்குக்குத் தூபமிட முடியும் என்று, திட்டமிட்டவர்கள் திட்டவட்டமாக நம்புகிறார்கள் என்பது மட்டும் திரையற்றுத் தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் பள்ளிகள் எரிக்கப்படும் போதும் இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளார்கள் என்ற செய்திகள் உள்நோக்கோடு பரப்பப்படுகின்றன. தற்போதும் காத்தான்குடியில் இருந்தும், வாழைச்சேனையில் இருந்தும் ஐ.எஸ். இயக்கத்தில் முஸ்லிம் இளைஞர்கள் முப்பது பேர் இணைந்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
கலவரத் திட்டம் சாத்தியமானால், இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்துக்குப் பாயும், முஸ்லிம்கள் அகதிகளாவது மட்டுமல்ல கிழக்கில் சன நெருக்கடி தோன்றும். இதனால் தமிழ் – முஸ்லிம் முரண்பாடு ஆழமாகி இன்னொரு இனக் கலவரமும் காணிச் சண்டையும் ஏற்படும் வாய்ப்புண்டு. அகதிகளின் பராமரிப்பாளர்களாகவும், போசகர்களாகவும், பாதுகாவலர்களாகவும் இருக்கும் கிழக்கு முஸ்லிம்கள் தங்கள் வளங்கள் பங்கிடப்படுவதைக் காலப் போக்கில் சகிக்காது போனால் சமூக உள் முரண்பாடு தோன்றும்.
இந்நிலைமை ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் நாடற்றவர்களாக ஆக்குவதோடு, மாபெரும் தீவிரவாத வன்முறைகள் வெடித்து நாடே சுக்குநூறாகும் சூழ்நிலை தோன்றும். மேலும் இன்று மஸ்ஜித்களுக்கும், வியாபாரத் தலங்களுக்கும் வைக்கும் நெருப்பு எதிர்காலத்தில் இலங்கைத் தீவையே எரித்தப் பொசுக்கும்.
முஸ்லிம்களின் தலையில் வைக்கும் தீ தேசத்தின் தேகத்தில் இடும் தீயாகும். மேற்காணும் ஆபத்தை இல்லாது செய்ய இதுவரை விலை போகாதிருக்கும் புத்திஜீவிகள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத் திட்டத்தை அவசரமாகத் தொடங்க வேண்டும். ஏலவே இனப்பிரச்சினை காரணமாக மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் இரண்டு தலைமுறையினரின் வாழ்வைத் தொலைத்த அனுபவத்தைக் கொண்ட நாம் இன்னும் முப்பது வருடங்களைத் தாங்கமாட்டோம்.
அரசாங்கத்தை அமைத்துள்ள பெரிய கட்சிகளின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் நாட்டுப் பற்றாளர்களாக நடித்துக் கொண்டு, நாடு நாசமாகிப் போனாலும் பரவாயில்லை, தொடர்ந்து நமது கட்சி ஆட்சியில் அமர்ந்திருந்தால் சரி என்ற நிலைப்பாட்டில் இருந்தால் மக்களில்லாத நாடே எஞ்சும் என்பதை உணர்ந்து விழிப்படைய வேண்டும்.
தற்காலத் தலைவர்களே, நீங்கள் உங்களுக்கு முன்பிருந்த தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பின்பற்றிய எல்லாம் முடிந்த பின் கண் திறந்து பார்க்கும் 1956, 1977, 1983 ஆம் ஆண்டுகளின் "நிஷ்ட்டைத் " தந்திரத்தைப் பின்தொடரக்கூடாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நிகழும் பெருந்துயர் பற்றி இதுவரை எதுவுமே கூறவில்லை. இவர் இன்னொரு யுத்தத்தையும் வெல்ல முடியும் என்று இறுமாந்து, வாளாதிருக்க முடியாது. இன்றுவரை சிங்களப் பெரும்பான்மை மக்களுக்குள் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருப்பவர் என்ற வகையிலும், தேர்தல் அரசியலில் ஒரு சூடு கண்ட பூனை என்ற வகையிலும் மக்களுக்கு ஆபத்தின் விளைவை விளக்க முன்வர வேண்டும். இவர் தன்னை முன்னிறுத்தி அரசியல் இலாபம் தேடும் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மக்கள் பிரதிதிதிகளைக் களத்தில் இறக்கி சிங்கள மக்களை விழிப்பூட்டும் வேலையைச் செய்ய உத்தரவிட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தர் இவ்விடயத்தில் இதுவரை இருந்தது போல் அசமந்தராக இருக்க முடியாது. என்றுமே நிகழ முடியாத பெருங்கனவொன்றை விதைத்து ஒரு தமிழ்த் தலைமுறையையே ஆயுத வன்முறைக்குள் அகப்படுத்திய அரசியல் தலைவர்களுள் இன்னும் உயிரோடு இருக்கும் இவர் தனது அனுபவப் பகிர்வைச் செய்யும் கடப்பாடுடையவர். ஆகையால் இவரும் இவர்தம் மக்கள் பிரதிநிதிகளும் நாட்டுக்கு அனுபவ உபதேசம் செய்தல் வேண்டும்.
முஸ்லிம் தலைவர்களும், அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கைகள் விடுதல், எரிந்த இடங்களைக் கோர்ட்டும் சூட்டும் அணிந்தபடி சென்று பார்வையிடல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறல், இளைஞர்களே அணி திரளுங்கள் என்று பக்குவமற்ற முறையில் வாயால் கண்ணிவெடி புதைத்தல், ஜனாதிபதிக்கும்- பிரதமருக்கும் இவ்விடயத்தில் நமக்குச் சொல்லப் பதிலேதும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளாமல் அவர்களைச் சந்திக்கத் தவம் கிடத்தல், பௌத்த போதகர் உடை அணிந்து கொண்டு வன்முறைக்குத் தூண்டும் நச்சரவங்களை உணர்ச்சி பொங்க வைது தொலைத்தல் போன்ற வழமையான காற்றில் கலந்து காணாமல் போகும் நடவடிக்கைகளை நிறுத்தி நீங்கள் போராட வேண்டும்.
இப்போராட்டத்திற்கு முதலில் "நப்சு" துறந்து தயாராக வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டக் கோரி முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்து பாராளுமன்றைப் பகிஷ்கரித்துப் பிரச்சினையின் தீவிரத்தை உலகுக்கு உரத்துக் கூறலாம். பாராளுமன்ற முன்றலில் கொடி பிடித்துக் கோஷமிட்டு தேசிய சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து நிவாரணம் தேடலாம்.
தங்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு ஏனைய சிங்கள, தமிழ் முற்போக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோரலாம். பாராளுமன்றம் கூடும் வேளை நடுவில் அமர்ந்து நியாயம் கேட்கலாம்.
முக்கிய சட்டம் ஒன்றை அரசு நிறைவேற்ற முற்பட்டால் ஆதரவை மறுக்கலாம், அல்லது எதிர்த்து வாக்களிக்கலாம். எதுவுமே எடுபடவில்லை என்றால் அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டுப் பின் ஆசனங்களில் அமரலாம். மக்கள் பிரதிநிதிதிகள் பல முறைகளில் போராடி வழிகாட்டிய பின்னர்தான் மக்களைப் போராட்டத்துக்கு அழைக்க வேண்டும். இவைகளைச் செய்வதற்கு முஸ்லிம் தலைவர்கள் அணிந்திருக்கும் இயக்க அலங்கார ஆடைகளைக் களைய வேண்டும்.
தாங்கள் அணிந்திருக்கும் அரச அனுசரணை எனும் கௌரவ ஆபரணத்தையும் களற்றி வீச வேண்டும். கலவர முஸ்தீபுகளைக் கண்டுகொள்ளாது விட்டால் நாடு கொள்ளாது. தூரத்து இடியும், முழக்கமும் நமது வாசல் படியில் வாசம் செய்ய அனுமதிப்போமானால் அப்பாவி மக்களைத் தீவிரவாதம் கொல்லாது விடாது.
இறுதியில், இந்தியா தலைமையில் பாகிஸ்தான் உள்ளிட்ட பன்னாட்டு அமைதிப்படை இலங்கைக்கு வந்து இலங்கையர்களை இலங்கையர்களிடம் இருந்து பாதுகாக்கவேண்டிய ஆசியாவின் ஆச்சரியம் நடந்தேறவும் கூடும்.


Comments
Post a Comment