வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர்களை தந்திரமாக பொலிஸாரிடம் சிக்க வைத்த யுவதி!
யுவதி ஒருவர் தன்னை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த மூன்று இளைஞர்களை தந்திரமான முறையில் சட்டத்தின் பிடியில் வைத்த சம்பவம் ஒன்று பலாங்கொடை பிரதேசத்தில் நடந்துள்ளது.
26 வயதான யுவதி ஒருவர் கஷ்டப் பிரதேசம் ஒன்றில் இருந்து வந்து விடுதியில் தங்கி பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை தொழில் புரிந்து வருகிறார்.
யுவதி பணி முடிந்து இரவு 7 மணியளில் தனது தங்குமிடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இளைஞர்கள், யுவதியை பலவந்தமாக வண்டியில் ஏற்றி பம்பகின்ன பிரதேசத்தில் உள்ள குறுக்கு வீதிக்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை பறித்துள்ளனர்.
இறுதியில் யுவதியை தாம் வல்லுறவுக்கு உட்படுத்த போவதாக கூறியுள்ளனர். அதனை செய்ய வேண்டாம் எனக் கூறிய யுவதி, மூவருடன் தனித்தனியாக நெருங்கி பழகுவதாக கூறி தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து இளைஞர்களும் யுவதியுடன் சகஜமாக பழகி பம்பஹின்ன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று யுவதிக்கு தேனீர் வாங்கி கொடுத்து, தங்க ஆபரணங்களை திருப்பி கொடுத்து, விடுதிக்கு அருகில் அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.
இந்த நிலையில், மறுதினம் மூன்று இளைஞர்களில் இருவர் யுவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
தான் சுகவீமான பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்கு சாப்பாட்டு பொதிலும் தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்துக்கொண்டு வருமாறும் யுவதி இளைஞர்களிடம் கூறியுளளார்.
பிற்பகல் ஒரு மணியளவில் இளைஞர்களில் ஒருவர் வைத்தியசாலைக்கு சென்று அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த யுவதிக்கு அருகில் சென்று சாப்பாட்டையும் தண்ணீர் போத்தலையும் கொடுக்கும் போது, பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.
இந்த இளைஞனிடம் நடத்திய விசாரணைகளின் பின்னர் ஏனைய இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர், நடத்தப்பட்ட அடையாள அணி வகுப்பில் யுவதி இளைஞர்களை அடையாளம் காட்டியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
யுவதி, இளைஞர்களை ஏமாற்றி, பலாங்கொடை - பின்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
பொலிஸாரின் ஆலோசனையின் படி இளைஞர்களை யுவதி சிக்க வைத்துள்ளதாக தெரியவருகிறது.


Comments
Post a Comment