நான்கு மாத கர்ப்பிணிக்கி நெருப்பினால் சூடு... பல கொடுமைகள் புரிந்த பெண்னுக்கு வலை.


நான்கு மாத கர்ப்பிணியொருவருக்கு, நெருப்பினால் சூடுவைத்ததாக கூறப்படும் மாமியார் உறவுமுறையுடைய பெண்ணை, கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொகவந்தலாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொகவந்தலாவை, பெற்றோசா பீட்லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த செ.விஜயகௌரி என்ற கர்ப்பிணியே, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர், சிகிச்சைக்காக, பொகவந்தலாவை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

மேற்படி பெண், கடந்த 2013ஆம் ஆண்டு, காதல் திருமணம் செய்துகொண்டுள்ளதுடன், தனது கணவரின் வீட்லேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவ்வீட்டில் வசித்து வந்த மாமியார் உறவுமுறையடைய பெண், கடந்த நான்கு வருடங்களாக, விஜயகௌரியை பல கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் நெருப்பினால் சூடும் வைத்துள்ளார்.

மாதாந்த மருத்துவ பரிசோதனைக்காக, இன்றுச் செவ்வாய்க்கிழமை, கெம்பியன் தோட்ட வைத்தியசாலைக்கு வந்த விஜயகௌரி, தனது நிலைமையை வைத்தியசாலையில் கடமையிலிருந்த தாதியாரிடம் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, குறித்த பெண், கெம்பியன் வைத்தியசாலையினூடாக, பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விஜயகௌரியிடம் விடயத்தை கேட்டறிந்துகொண்ட பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரியான ஏ.எஸ்.கே.ஜயசூரிய, அப்பெண்ணை உடனடியாக  பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.

தனக்கு நடக்கின்ற கொடுமைகளை கணவரிடம் பலமுறை எடுத்துக் கூறியபோதும் சித்திரவதை தொடர்ந்த வண்ணமே உள்ளதாக, மேற்படி பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

விஜயகௌரியின், வலதுகை, நெஞ்சு, தலை போன்ற பகுதிகளில் நெருப்பினால் சுட்டக் காயங்கள் காணப்படுவதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், விஜயகௌரியின் மாமியாரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments