கட்டாரிலுள்ள இலங்கையர்களை மீட்டெடுக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பாகும்


சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையால் இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என இ.தொ.காவின் உப தலைவரும் ஊவாமாகாண சபை அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வளைக்குடாவைச் சேர்ந்த ஐந்து நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரேன், லிபியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜந்திர உறவினை துண்டித்துள்ளன.

இதனடிப்படையில் கட்டார் நாட்டில் இலங்கையினை சேர்ந்த அதிகளவிளான இளைஞர் யுவதிகள் தொழில் புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக மலையகத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகளில் அதிகளவிலானோர் வீட்டுப் பணிக்காகவும், கட்டட நிர்மாண பணிக்காகவும், வாகன சாரதிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் தங்குமிட பாதுகாப்பு மட்டுமின்றி தேவை ஏற்பட்டால் இவர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இவ்வாறு பல தொழில் வாய்ப்புக்களை கருதி மலையக இளைஞர் யுவதிகள் கட்டாருக்கு மட்டுமின்றி ஏனைய வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். அவர்கள் அவ்வாறு எங்கு சென்று பணிப்புரிந்தாலும் அவர்கள் இலங்கை பிரஜை என்ற வகையில் அவர்களின் தங்குமிட பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு போன்ற அனைத்து தேவைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் இலங்கை அரசே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் இ.தொ.கா பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மலையக இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களை தாய் நாட்டிலேயே தக்க வைக்கவும் பலதரப்பட்ட வேலைத்திட்டங்களை கடந்த பல வருடகாலமாக முன்னெடுத்து வந்தார்.

சமூகநல அபிவிருத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு அமைச்சு அவரின் பொறுப்பில் காணப்பட்ட வேளையில் கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மலையக இளைஞர் யுவதிகளுக்கு கோழி குஞ்சு வளர்ப்பு, மாடு வளர்ப்பு மற்றும் ஆடு வளர்ப்பு போன்ற சுயத்தொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.

அதுமட்டுமின்றி தையல் இயந்திரங்கள் மற்றும் சிறுகடைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டதோடு மலையக இளைஞர் யுவதிகளில் 100இல் 50 சதவீதமானவர்கள் இலங்கையிலேயே பணிப்புரிவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தரமான நிறுவனங்களில் அவரது முயற்சியின் மூலம் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும் இ.தொ.கா தலைவர் முத்துசிவலிங்கம் கமநெகும வேலைத்திட்டத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையக இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழிலை ஏற்படுத்திகொடுக்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

அதுமட்டுமின்றி எனது முன்னாள் அமைச்சான சிறுகைத்தொழில் அமைச்சின் மூலம் சாரதி பயிற்சி, ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி, தொலைபேசி பழுதுபார்த்தல் பயிற்சி, தச்சுதொழில் பயிற்சி, தையல் பயிற்சி மற்றும் அழகுக்கலை பயிற்சி போன்ற துறைகளில் பல பயிற்சிகள் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயாவின் முயற்சியினால் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வைத்தியசாலை, சுகாதார திணைக்களம், கிராமசேவகர்கள், தபால் காரியாலயம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம், பிரதேசசெயலகம், மாவட்டசெயலகம், கல்வித்திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் போன்ற பலஅரச திணைக்களங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்து அவர்களை தாய் நாட்டிலேயே தங்கி வேலை செய்வதற்கான வழி வகைகளையும் செய்து கொடுத்துள்ளோம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

மேலும், இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா குழு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை மிக விரைவில் சந்தித்து கட்டாரில் இருக்கும் மலையக சொந்தங்கள் மட்டுமின்றி அனைத்து இளைஞர் யுவதிகளையும் பாதுகாப்பான முறையில் கவனிக்கவும், தேவை ஏற்படின் அரசாங்கத்தின் மூலம் பாதுகாப்பாக நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக வேலைத்திட்டங்களையும் இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments