இளம் மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
(புத்தளம் மேலதிக நிருபர்)
புத்தளம் மதுரங்குளி, நள்ளாந்தளுவப் பிரதேசத்தில், தனது மனைவியை எரித்துக்கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மதுரங்குளி, நள்ளாந்தளுவப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய முஹம்மது தமீம் ஷாமிலா என்ற ஏழு மாதக் குழந்தையின் தாய், கடந்த மே மாதம் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவரது கணவரினால் கை மற்றும் கால்கள் என்பனவற்றை கட்டிவைத்து விட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்ததுடன், தனது ஏழு மாதக் குழந்தையுடன் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், தீயில் எரிந்துகொண்டிருந்த குறித்த பெண்ணின் கூக்குரல் கேட்டு, அவ்விடத்துக்குச் சென்ற அயலவர்கள், கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த பெண்ணை மீட்டு, புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பெண், புத்தளம் தள மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் 15 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மே மாதம் 20ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்பத்தில் இருவருக்கும் ஏற்பட்டு வந்த தகராறே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாகும் என முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தனது மனைவியை தீமூட்டி எரித்ததாகக் கூறப்படும் கணவன், ஏழு மாதக் குழந்தையை தனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருந்தார்.
இவ்வாறு தலைமறைவாகி இருந்த மரணமான பெண்ணின் கணவர், முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமீரகம பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு வருகை தந்த போதே மதுரங்குளி பிரதேசத்தில் வைத்து 25 நாட்களின் பின்னர் பொலிஸாரினால் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இம்மாதம் முதலாம் திகதி புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்தும் விளக்கமற்றியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பன வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் புதன்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளம் தாய் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா அல்லது உயிருடன் கட்டி வைத்து எரிக்கப்பட்டாரா என்பது தொடர்பில் தெளிவுகளை பெறுவதற்காக தீயினால் எரிந்துகொண்டிருந்த சாமிலாவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதற்காக அவர்களை அடுத்த மாதம் 6ஆம் திகதி மன்றுக்கு அழைத்து வருமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபரான ஷாமிலாவின் கணவரின் குடும்ப பராமரிப்பில் உள்ள சாமிலாவின் குழந்தையை நீதிமன்றத்தின் ஊடாக மீட்டு சாமிலாவின் விருப்பத்திற்கிணங்க மூத்த சகோதரியிடம் ஒப்படைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் தெரிவித்தார்.
மரணமான ஷாமிலாவின் கணவரைக் கைதுசெய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என, புத்தளம் நகரில் பல்வேறு சமூக அமைப்புகளினாலும், பெண்கள் அமைப்புக்களினாலும் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment