நாட்டில் மீண்டும் யுத்தம் தலைதூக்கும் அபாயம்


இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு தண்டனை வழங்காவிட்டால் நாட்டில் மீண்டும் யுத்தம் தலைதூக்கும் அபாயம் இருப்பதாக இணை அமைச்சரவைப்பேச்சாளர்கள் தெரிவித்தனர்.

இவற்றுடன் தொடர்புள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர்கள், பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரரை அமைச்சர்கள் சிலர் பாதுகாப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் நிராகரித்தனர்.

கடந்த ஆட்சியை விட குறைவான சம்பவங்களே இந்த ஆட்சியில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அண்மைக்கால இனவாத செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு அமைச்சரவையினால் இது தொடர்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.

அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையை இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இணை அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் பதில் அளித்தார்கள்.

அமைச்சரவை அறிக்கையை வாசித்த அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் செயற்படும் நல்லாட்சி அரசாங்கம் , மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆணைக்கு இணங்க, எமது நாடு மீண்டும் கடந்தகால மோதல் நிலைமைகளுக்கு திரும்பாதிருப்பதை உறுதி செய்தல், நல்லிணக்கம், நிலையான சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி எமது தேசத்தை வழிநடத்தல் என்பவற்றில் மிக உறுதியாக உள்ளது.

நாம் முனைப்புடன் கட்டியெழுப்பவுள்ள சமூகத்தில் சமூக, இன மற்றும் மத வெறுப்புக்கள் மற்றும் வன்முறைகள் மற்றும் தண்டனைக்குரிய செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.

அண்மைக் காலமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள், இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து நாம் மிகவும் வருந்துகிறோம்.

வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தனிநபர்கள் மற்றும் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் அருவருக்கத்தக்க பேச்சுக்கள் உள்ளிட்ட சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தகைய சம்பவங்களினால் இடம்பெற்ற வாழ்வாதார இழப்புக்கள் மற்றும் சொத்து சேதம் தொடர்பாகவும், குறிப்பாக தனிநபர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாகவும் நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்.

வன்முறைகளை தூண்டுதல் மற்றும் இழிவுபடுத்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தனிநபர்கள் மற்றும் குழுக்களின் அருவருக்கத்தக்க உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியன இலங்கை சமூகத்தின் பல்லின இன, மத பின்னணிகளுக்கு எதிரானவையாகும்.

நல்லிணக்கம், சமாதான இருப்பு, சட்ட விதிமுறைகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் உடன்பாட்டினை மீள் உறுதி செய்வதோடு, முஸ்லிம் சமூகத்தினர், ஏனைய மதங்கள் மற்றும் நாட்டின் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை தூண்டுபவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்திற்கு ஏற்ப, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குகிறோம்.

வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறையை தூண்டும் அனைத்து தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக எவ்வித கால தாமதமுமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இத்தகைய சம்பவங்களின் போது குற்றவாளிகளின் சமூக அந்தஸ்து, இன அல்லது மதப் பின்னணி அல்லது அரசியல் சார்புகள் எவற்றையும் கருதாது எவ்வித பாரபட்சமுமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவாக்குமாறு சட்ட அமுலாக்க அதிகாரிகள் மற்றும் கௌரவ சட்ட மன்ற அதிபர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குகிறோம்.

எமது நாட்டினுள் இத்தகைய வெறுப்புணர்வினை பரப்பிவரும் நபர்களுக்கு எதிராக நடவடிக் கை எடுக்கப்படும் நிலையில் அமைதி காத்துவரும் சிவில் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது நாட்டில் நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துதலை நோக்காகக் கொண்ட முயற்சிகளில் இலங்கையர் அனைவரும் தங்கள் மற்றும் செயற்தகு பங்குபற்றலையும், தலைமைத்துவத்தையும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பாக இதைக் கருதுகிறோம்.

நிலையான சமாதானம், முன்னேற்றம், ஒவ்வொருநபரினதும் மரியாதையை உறுதிப்படுத்தல், பன்முகத்தன்மையை மதித்தல் உட்பட சம குடியுரிமையின் உரிமைகளான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்குதல் ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக தங்களது பங்களிப்பை வழங்குமாறு அனைத்து மக்களையும் நாம் கோருகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணைகள் துரிதம்

இதேவேளை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜித ​சேனாரத்ன,அமைச்சர் சம்பிக்க ரணவக்க மீதான குற்றச்சாட்டு பற்றி அவர் அமைச்சரவையில் விளக்கினார். தனக்கு இதனோடு எந்த தொடர்பும் கிடையாது என அவர் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இதே வேளை ஞானசார தேரரை பாதுகாக்கும் தேவை அமைச்சர்களுக்கு கிடையாது என அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,

சிசிரிவி பதிவுகளின் படி பொதுபல சேனாவுடன் தொடர்புள்ள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய சந்தேக நபர்களையும் துரிதமாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனாவின் வழக்குகளுக்கு சட்டத்தரணி மனோகர டி சில்வா தான் சட்ட உதவி வழங்குகிறார். அவருக்கு ஞானசார தேரர் இருக்கும் இடம் தெரிந்திருக்கும். இவர் கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் தொடர்புள்ள வழக்குகளை கையாண்டார்.

யுத்த காலத்திலும் மறைந்திருந்த சிலரை பிடிக்க முடியவில்லை. இவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சகல இனங்களின் உரிமைகளையும் பாதுகாக்கவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. தவறு செய்யும் எவரையும் தப்பிக்க இடமளிக்க மாட்டோம் என்றார்.

ஞானசார தேரர் இனவாதியில்லையா?

ஞானசார தேரரையும் பொதுபல சேனாவையும் மட்டும் குறிவைத்து செயற்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறானால் ஞானசார தேரர் இனவாதியில்லையா? பிக்குகள் சிலர் சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றனர்.

கடந்த ஆட்சியில் பேருவளையில் 235 கடைகள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. எமது ஆட்சியில் ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபரகள் சிலரும் கைதாகியுள்ளனர்.

எமது ஆட்சியில் பேருவளை போன்ற சம்பவங்கள் இடம்பெறவில்லை.புத்த மதத்தை விமர்சித்த முஸ்லிம் இளைஞரை காப்பாற்றுமாறு அவரின் பெற்றோர் கோரிய போது அமைச்சர் கபீர் ஹாசிமும் ரிசாத் பதியுதீனும் அதனை நிராகரித்துள்ளனர் என்றார்.

இரு தரப்பினராலும் நல்லிணக்கத்திற்கு குந்தகம்

அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறியதாவது,

பொலிஸாருக்கு சுதந்திரமாக செயற்பட இடமளித்தால் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது. இனங்களுக்கிடையில் முறுகளை ஏற்படுத்த முயலும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது.

சில முஸ்லிம் அமைச்சர்கள் அரசகாணிகளில் முஸ்லிங்களை பலாத்காரமாக குடியேற்றுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். மறுபக்கம் ஞானசார தேரர் போன்றோரின் செயற்பாடுகள் குறித்தும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இரு தரப்பினரும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகமாகவே நடக்கின்றனர். சிலர் சட்டத்தை கையிலெடுப்பதால் தேவையில்லாத பிரச்சினை உருவாகிறது.

Comments