முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
முதலாம் தரத்திற்கு பாடசாலை மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று (27) ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
2018 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தினமாக 30.06.2017 அன்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்பொழுது தபால் திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெற்றோர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இது தொடர்பாக பெற்றோர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து முதலாம் தரத்திற்கு பாடசாலை மாணவர்களை உள்வாங்குவதற்கான திகதியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் விண்ணப்பங்களை நேரடியாக அதிபர்களிடம் கையளிக்க முடியும்.
கையளித்தமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் வழங்குகின்ற ஆவணத்தையும் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லது பதிவுத் தபால் மூலமாக இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க முடியும் எனவும் அந்த ஊடக அறிக்கையில் கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment