திருகோணமலையில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது.
திருகோணமலை – பம்புறுகஸ்வெவ பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய நபரொருவரை நேற்று (06) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச்சேர்ந்த எஸ்.பி. ஏ.டி.எம்.ரத்னாயக்க (26வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்திருந்த நிலையில் தந்தை சுகயீனம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்
13 வயது சிறுமி பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் நீரிழிவு நோய் காரணமாக பாட்டியின் இரண்டு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் சிறுமி பாட்டிக்கு உதவிகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி வெளியே சென்றிருந்த போது இரண்டு திருமணம் முடித்து விடுபட்ட நிலையில் தனியாக காலத்தை கழித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் சிறுமியை பயமுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (7) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment