வீதி விதிமீறலுக்கு 25 ஆயிரம் தண்டம்: ஜனாதிபதியிடம் அறிக்கை கையளிப்பு
வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக அறவிடப்படும் தண்டப்பணத்தை 25ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக அறவிடப்படும் தண்டப் பணத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமரத்னவினால்அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதைக் குறைக்கும் வகையிலும் வீதி விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்குடனும் வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக குறைந்த பட்ச தண்டப்பணமாக ரூபா 25,000 வரை அதிகரிக்கப்பட வேண்டுமென 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் முன்மொழியப்பட்டிருந்தது.
இந்த முன்மொழிவுகளுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக ஜனாதிபதி அவர்களினால் இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, போக்குவரத்து விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சட்ட ஆலோசகர் சோபித்த ராஜகருணா, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே. ஜகத் சந்திரசிறி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் (போக்குவரத்து) நந்தன முனசிங்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.
அந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையே இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.


Comments
Post a Comment