பௌத்த பீடங்களின் அதிர்ச்சிகரமாக முடிவு
நாட்டில் புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் யாப்பு திருத்தமோ தேவையில்லை என நான்கு பிரதான பௌத்த பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சபைகள் கூடி முடிவு செய்துள்ளன.
பிரதான பௌத்த பீடங்களான அஸ்கிரிய, மல்வத்த மற்றும் அமரபுர உள்ளிட்ட பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் பெளத்த சபைகள் கண்டியில் நேற்று முன்தினம் கூடி எடுத்துள்ள இந்த தீர்மானம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது முன் வைக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
புதிய அரசியலமைப்பு நாட்டில் இல்லாத பிரச்சினை ஒன்றை ஏற்படுத்துகின்ற விடயம் என்றும் அவ்வாறானதொரு மாற்றம் அவசியமற்றது என்றும் பௌத்த பீடங்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு நாட்டுக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பையே தொடர்ந்து பேணுவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் மேற்படி பௌத்த பீடங்கள் தீர்மானித்துள்ளன.
எனினும் அரசாங்கம் பௌத்த பீடங்களின் நிலைப்பாட்டு தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் தமக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களின் ஆணையை மீறும் வகையில் செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது வெளியிடப்படுவதற்கே அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கு அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் எனவும், இதன் இறுதி முடிவை பாராளுமன்றமே எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தற்போதுள்ள அரசியலமைப்பைக் கொண்டு வந்த வேளை எதிர்த்தவர்கள், இப்போது அதனையே செயற்படுத்த வேண்டும் எனக் கூறுவது ஏன் என்று தெரியவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையிலும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அதன் வரைபுகள் இறுதிக்கட்டத்தை அடைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பௌத்த பீடங்கள் இவ்வாறான அதிர்ச்சியளிக்கத்தக்க தீர்மானத்தை எடுத்திருப்பது கவலையைத் தருகிறது.
இந்த முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறும் சகல மக்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்புக்குத் தடையாக இருக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் மேற்படி பௌத்த பீடங்கள் தமது தீர்மானத்தை வாபஸ் பெறுவதுடன் இந்த நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்குத் தேவையான புதிய அரசியலமைப்பை வெற்றிகரமாக நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.


Comments
Post a Comment