தன்னைக் கைது செய்யப் போவதாக மகாநாயக்கரிடம் கோட்டாபய இன்று முறைப்பாடு


தன்னைக் கைது செய்யப் போவது தொடர்பாக அரசாங்க தரப்பில் வெளியான செய்தி குறித்து மகாநாயக்க தேரர்களிடம் இன்று (07) கோட்டாபய ராஜபக்ஷ நேரில் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

தான் சாதாரணமாக பிக்குகளிடம் அரசியல் பேசுவதில்லையெனவும், அவ்வாறு பேசாததனால்தான்  இன்று கண்டிக்கு வந்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

தன்னால் செய்யப்பட்ட ஒரேயொரு துஷ்பிரயோகம் எல்.ரி.ரி.ஈ. அமைப்பை இல்லாதொழித்ததுதான் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இதற்காக தன்னைச் சிறைப்படுத்தப் போவதாயின், அது குறித்து பிரச்சினையில்லையெனவும் மூன்று மகாநாயக்க தேரர்களிடமும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடம் இவர் இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ராஜபக்ஷாக்கள் நாட்டை கொள்ளையிடவில்லையெனவும், நாட்டை உயிர் கொடுத்து பாதுகாத்தவர்கள் அவர்களே எனவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தன்னை ஒரு மாத காலத்துக்குள் சிறைப்படுத்துவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். அவ்வாறு பிடிப்பதற்கு முடியாது எனவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். 

Comments