மாணவர் கடத்தல் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சிகள்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளிலிருந்து வெள்ளை வேனில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் தமது பிள்ளைகள் விடயத்தில் நீதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறும் அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தலை நகரின் பல பிரதேசங்களில் இருந்தும் கடத்தப்பட்டு திருகோணமலை, கொழும்பு கடற்படை முகாம்களில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட 11 பேரில் மூவர் முஸ்லிம்களாவர். ஏனையோர் தமிழர்கள். இந் நிலையில் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் அதன் காரணமாகவே கைது செய்யப்பட்டதாகவும் அண்மையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனை முற்றாக மறுத்துள்ள கடத்தப்பட்டவர்களின் பெற்றோர் தமது உறவுகளுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் எந்தவித தொடர்புகளும் இல்லை என்றும் இந்த சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூசி திசை திருப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மையில் மேற்படி கடத்தல் சம்பவமானது கப்பம் பெறும் நோக்கில் கடற்படையைச் சேர்ந்த குழு ஒன்றினால் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமை உறுதியாகியுள்ளது.
இக் கடத்தல்களுடன் தொடர்புடைய 7 கடற்படை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் ஒரு முக்கிய திருப்பமாகவே கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் சிலர் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், மேற்படி கடத்தல் சம்பவம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
தமது பிள்ளைகளையும் உறவுகளையும் பறிகொடுத்து கடந்த 8 வருட காலமாக பொலிஸ் நிலையங்களிலும் நீதிமன்றப் படிகளிலும் ஏறி இறங்கி கண்ணீரும் கம்பலையுமாக அலையும் அப்பாவிப் பெற்றோரின் உணர்வுகளில் விளையாடும் விதமாக விமல் வீரவன்ச போன்றோர் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கடத்தப்பட்ட மேற்படி நபர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெளிவாகப் புலப்பட்டிருக்க, விமல் வீரவன்ச அவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன என்பது பற்றியும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் விமல் வீரவன்ச போன்றோரின் ஆசீர்வாதங்களுடனேயே இவ்வாறான குற்றச் செயல்கள் அரங்கேறின.
இந் நிலையில் தற்போதும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாக பொய்களை அவிழ்த்துவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.


Comments
Post a Comment