மிரிஸ்வெவ பகுதியில் பதற்றம்
திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மிரிஸ்வெவ பகுதியில் தனியாருக்குச்சொந்தமான காணியை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கும் நோக்கில் இன்று (20) நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் நில அளவை செய்யப்பட்டதையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டது.
யுத்தத்திற்கு முன்னர் குடியிருந்த காணியை விட்டுச்சென்று மீண்டும் மீள்குடியேறி பல வருடங்களாகிய போதும் தற்போது அரச காணியென கூறி பொலிஸ் நிலையமொன்றினை அமைப்பதற்காக பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்து நில அளவையாளர்களும் பொலிஸாரும் நில அளவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது காணி உரிமையாளர்கள் தனது காணியை அபகரிக்க வேண்டாம் என தெரிவித்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காணி உரிமையாளர் தான் பல வருடங்களாக குடியிருந்த காணியை அரச காணி என ஆக்கிரமித்து வருவதினால் தான் சாவப்போவதாக தெரிவித்து தனக்கு தானாகவே கல்லால் அடித்து தலையை உடைத்துக்கொண்டமையையும் காணக்கூடியதாக இருந்தது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சொத்துக்களை இழந்து மீண்டும் மீள்குடியேறி தென்னங்கன்றுகளை நாட்டி காணிகளை அழகு படுத்தி வரும் வேளையில் அரச காணி என கூறி அப்பாவி மக்களுடைய காணிகளை அபகரிப்பது மக்கள் மத்தியில் அரசுடன் கசப்பு தன்மையை ஏற்படுத்தும் செயல் எனவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் தனியார் காணிகளை அளவிடும் பணி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.




Comments
Post a Comment