தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விக்கவே படையினர் கைது: விமல் வீரவங்ச
தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விக்கும் நோக்கிலேயே கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கொமடோர் தசநாயக்க உள்ளிட்ட சகல இராணுவப் புலனாய்வாளர்களையும் உடனடியாக விடுதலை செய்து, படையினரை வேட்டையாடப்படுவதை நிறுத்துமாறு இந்த துரோக அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இதனை தொடர்ந்தும் செய்ய இடமளிக்கப் போவதில்லை மக்களுக்கு கூறிக்கொள்கிறோம். இன்று கொமடோர் டி.கே.பி. தசநாயக்க கைது செய்யப்பட்டார்.
இதேபோல் போர் காலத்தில் போருக்கு தலைமை தாங்கிய அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள். இவர்கள் நாட்டை மீட்க அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர்கள்.
அனைவரையும் சிறையில் அடைக்கும் வரை காத்திருக்க வேண்டுமா?. இந்த விடயம் சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.
அந்த அறிக்கையில் குறித்த குற்றச்சாட்டில் எந்த அதிகாரியையும் கைது செய்யும் அளவுக்கு போதுமான காரணங்கள் இல்லை.
கொமடோர் தசநாயக்க உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை. படையினரை கைது செய்யுமாறு மேல் மட்டத்தில் இருந்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
இதனால், புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தமது இஷ்டத்திற்கு படையினரை வேட்டையாடி வருகின்றனர்.
ஐ.நா மனித உரிமை பேரவையை மகிழ்விக்க பார்க்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கவே இதனை செய்கின்றனர்.
இதன் காரணமாக இந்த தவறை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது, எதிராக வீதியில் இறங்குமாறு தேசிய சுதந்திர முன்னணி பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment