யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இந்தியா எப்போதும் உதவும்
- எம்.எல்.லாபிர் -
இந்திய துணைத்தூதுவர் சிறீமான் ஆ.நடராஜா
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இந்தியா எப்போதும் உதவும் என யாழிலுள்ள இந்திய துணை தூதுவராலயத்தின் இந்தியத் துணைத்தூதுவர் சிறீமான் ஆ.நடராஜா தெரிவித்தார்.
கதீஜா கல்லூரிக்கான புதிய கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்றையதினம் கல்லூரி அதிபர் ஜான்சி தலைமையில் இடம்பெற்றது, இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே இந்தியத் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணம் யுத்தத்தால் முழுமையாகப் பாதிப்படைந்திருக்கின்றது, யுத்தம் முடிவடைந்தவுடனே நாங்கள் சில அடிப்படையான உதவிகளை இலங்கைக்கு வழங்கினோம்.
இப்போது இரண்டாம் கட்டமாக கல்வி, கலாசார விடயங்களுக்கு நாம் உதவுகின்றோம். கல்வி அமைச்சிடம் நாங்கள் உதவிகளை வழங்குவதற்காக சில பாடாசாலைகளைத் தெரிவு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தோம்.
அவர்கள் எவ்வித பாகுபாடுமின்றி ஒரு சில தேவையுள்ள பாடசாலைகளை எமக்கு சிபாரிசு செய்தார்கள், இங்கு பாடசாலைக்கு வந்து பார்க்கின்றபோதுதான் இது எவ்வளவு தேவையுள்ள பாடசாலை என்பதை என்னால் உணர முடிகின்றது. ஒரு கட்டடமும் இந்தப் பாடசாலையில் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை. எனவே உங்களுக்கு வழங்கப்படும் இந்த உதவி மிகவும் முக்கியமானதுவே.
இந்தப் பாடசாலை பற்றிப் பேசும்போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அய்யூப் அஸ்மின் பற்றி கூறவேண்டியது எனது கடப்பாடாகும். அவரைப் போன்ற ஒருவரை நீங்கள் பெற்றிருப்பது சிறப்பானது.
பாடாசாலைக்கு பல்வேறு உதவிகள் தேவை என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். என்னால் இரண்டு விடயங்களைத் இவ்விடத்தில் தெரிவிக்க முடியும், ஒன்று இந்தப் பாடசாலையின் கட்டட நிர்மானப் பணிகள் முடிவடைந்ததும் முதல் பணியாக ஒரு முழுமையான நூலகத்திற்குத் தேவையான அனைத்தையும் நாம் வழங்குவோம்.
அடுத்து போட்டோகொப்பி இயந்திரம் தேவைப்படுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதனை நாளைக்கே எங்களுடைய அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்விலே வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மின், இம்மானுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திர ராஜா ஆகியோரும் யாழ் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள், பெற்றோர், மாணவிகள், அயல் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Comments
Post a Comment