திருகோணமலையில் UNP தனித்து போட்டியிட்டே வெற்றி பெற முடியும் – இம்ரான்-MP


எதிர்வரும் தேர்தல்களில் திருகோணமலையை ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை கிண்ணியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த வாரம் எமது தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விரிவாக கலதுரையாடினேன்.இதன்போது கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எமது மாவட்டத்தில் காணப்படும் சவால்கள் தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு வெற்றிகரமாக முறையடித்து எனது தந்தை காலத்தில் காணப்பட்டது போன்று திருகோணமலையை ஐக்கியதேசிய கட்சியின் கோட்டையாக மாற்றுவது தொடர்பாகவும் பிரதமருடன் விரிவாக கலந்துரையாடினேன்.

இங்கு நல்லாட்சியை கொண்டு வருவதற்கு ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே பாடுபட்டோம்.ஆனால் நல்லாட்சி ஏற்பட்ட பின்னர் அதன் பயனை முன்னால் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் அனுபவித்துகொண்டிருக்கும் துர்பாக்கிய நிலை காணப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்டவரே இங்கு பிரதி அமைச்சராக உள்ளார்.தேர்தலுக்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன் வந்தவர்களும் நல்லாட்சியை ஆதரித்து ஒரு கூட்டம் நடாத்தாதவர்களும் இன்று இங்கு அதிகாரத்தில் உள்ளனர்.

மேலும் எமது போட்டி கட்சிகளில் பிரதேசத்துக்கு ஒரு உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் ஐக்கியதேசிய கட்சியின் ஒரே ஒரு தமிழ் பேசும் உறுப்பினராக நான் மட்டுமே உள்ளேன்.இந்த உறுப்பினர் அனைவரையும் தாண்டி ஐக்கியதேசிய கட்சியின் செயற்பாடுகளை கிழக்கு மாகாணம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.

எமது மாவட்டத்தை பொறுத்தவரை நிர்வாக மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். இன்னும் பெரும்பாலான அரச நிறுவங்களில் முன்னால் ஜனாதிபதியின் ஆதரவாளர்களே உள்ளனர். இவர்கள் அரசியல் நிகழ்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதனால் தொடர்ச்சியாக எமது மாவட்டத்தில் இன முறுகலை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் அரங்கேறி வருவதை நாம் அறிவோம்.மேலும் இவர்களது செயற்பாடுகளால் மக்களுக்கு சேர வேண்டிய அபிவிருத்தி பணிகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

இந்த விடயங்கள் தொடர்பாக பிரதமரை தெளிவூட்டியுள்ளேன் அவரின் வழிகாட்டலில் எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி இந்த மாவட்டத்தில் வெற்றி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் திருகோணமலையை பொறுத்தவரை ஐக்கியதேசிய கட்சி வெற்றிபெற ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையில்லை நாம் தனித்தே திருகோணமலையை கைப்பற்றலாம். ஆனால் இங்குள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு அவர்களின் பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசிய கட்சி தேவை. அவர்களால் தனித்து போட்டியிட்டு இங்கு வெற்றிபெற முடியாது. ஆனால் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது தொடர்பாக அப்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்படும்.

முன்னால் ஜனாதிபதி நாட்டை கையளிக்கு போது பெரும் கடன் சுமையில் மத்தியில் இக்கட்டான நிலையிலேயே காணப்பட்டது. ஜனாதிபதி பிரதமரின் முயற்சியில் நாட்டின் தற்போதையை வருமானம் பல மடங்காக அதிகரித்து பெருமளவிலான கடன்களும் மீள செலுத்தப்பட்டுள்ளன. எமது பிரதமர் அவர்கள் கட்சியை விட நாட்டின் அபிவிருத்திக்கு முன்னிலை கொடுத்து செயற்பட்டமையால் எமது கட்சி ஆதரவாளர்கள் பலர் அதிருப்தியுடன் காணப்படுவது நாம் அறிந்ததே. தற்போது நாட்டின் கடன் சுமை ஓரளவுக்கு குறைந்து நாடு அபிவிருத்தி பாதையில் செல்வதால் இனி பிரதமர் அவர்கள் கட்சி தொடர்பிலும் பூரண கவனம் செலுத்துவார். எனவே எதிர்வரும் தேர்தல்களில் கட்சியை வெற்றிபெறச் செய்ய உங்கள் ஒத்துழைப்பு என்றும் அவசியம்

Comments