15 வயதுடைய சிறுமியொருவரின் கையினை பிடித்திழுத்த 72 வயதுடைய முதியவருக்கு சிறை
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு வருடத்திற்கு முன்னர் பதினைந்து வயதையுடைய சிறுமியொருவரின் கையைப் பாலியல் ரீதியில் பிடித்திழுந்த முதியவர் ஒருவருக்கு நான்கு மாத கட்டாய சிறைதண்டனையும்,1500 ரூபாய் தண்டப்பணமும் அதனை செலுத்தாத பட்சத்தில் ஒரு மாதம் சிறைதண்டனையும் ,மேலும் ஐம்பதாயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்டஈடாக செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தத் தவறின் மூன்று மாதம் சிறைதண்டனையும் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று(10) உத்தரவிட்டார்.
86,பிரதேசம் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதினைந்து வயதுடைய பக்கத்துவீட்டு சிறுமியொருவரை பாலியல் ரீதியில் கையைப்பிடித்திழுத்ததாக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்த நிலையிலே நேற்றைய தினம் (10)குறித்த நபரை குற்றவாளியாக இணங்கண்டு நீதிவான் தீர்ப்பினை வழங்கினார்.
குறித்த நபருக்கெதிராக பிறிதொரு சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய வழக்கொன்றும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Comments
Post a Comment