இனவாதத்தை தோற்றுவிப்பது சமூக ஒற்றுமையை பாழாக்கும்


தேர்தல் வெற்றிக்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவித்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையைப் பாழ்படுத்துகின்றார்கள் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.

ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் மொஹமட் ஷரீப் அனீஸை பாராட்டும் நிகழ்வு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் பயணம் மிகவும் கடினமானது. அதுவும் வன்னி மாவட்டத்தில் இந்தப் பயணத்தில் தாக்குப் பிடிப்பதென்பது மிகமிகக் கடினமானது.

அகதியான ஒருவர் அரசியலுக்குள் வந்து எம்.பியாகி, அமைச்சராகி, பின்னர் கட்சியொன்றை தொடங்கி சமூகத்துக்கு தொடர்ந்தும் பணியாற்றுவதென்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக இருந்த போதும், இறைவனின் உதவியாலும் மக்களின் ஆதரவாலும் இதனைச் சாதிக்க முடிந்தது.

இரண்டு முறை நாடாளுமன்றம் செல்வதே கடினமானதென அப்போது சிலர் கூறினர். ஆனால், இறைவனின் நாட்டம் இருந்ததனால் நான்கு முறை செல்ல முடிந்திருக்கின்றது.

நான் சார்ந்த சமூகத்துக்கு மாத்திரமன்றி தமிழ், சிங்கள சமூகத்துக்கும் எனது பணிகளை வியாபிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments