முஸ்லிம் கூட்டமைப்பில் ரிசாத் அதாவுல்லாஹ்
புதிதாக அமையவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாஹ் ஆகிய இருவரும் தங்களது கட்சிகள் இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
முஸ்லிம் கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துல் ரஹ்மானுடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது என்றார்.
இதேவேளை தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாவுடனான முஸ்லிம் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையொன்று கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத், தொழிலதிபர் நஸார் ஹாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேச்சுவார்த்தையின்போது, தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா கூட்டமைப்பில் இணைந்துகொள்வதாக உறுதியளித்தார். முஸ்லிம் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது, மக்களின் ஆதரவினை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.
நாட்டில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கெதிராக எவ்வாறு குரல் கொடுப்பது என்பது பற்றியும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. முஸ்லிம் கூட்டமைப்பு வெறும் தேர்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்படவில்லை, தேர்தலில் களம் இறங்குவது மாத்திரமல்ல பிரதான நோக்கம். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் கொடுப்பதும், இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கச் செய்வதுமே முக்கிய நோக்கம்.
அனைத்து அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை அடுத்து முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து வெகு விரைவில் கொழும்பில் மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது என்றார்.


Comments
Post a Comment