புதிய தேர்தல் முறையால் முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பு


அரசு அறிமுகப்படுத்தும் புதிய தொகுதிவாரி தேர்தல் முறை மூலம் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகப்புடுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நியூயோர்க் விஜயத்திற்கு முன் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், அவரது அதிகாரிகளும் நேற்று புதிய தேர்தல் முறை சட்டமூலத்தை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாகப் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அமுலுக்கு வந்தால் குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் என அரசாங்கத்தின் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நேற்று சகோதர பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் 20ஆவது அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாகப் பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அறிவித்திருந்தது. மாகாணசபைகளின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பான சரத்தை அமுல்நடத்துவதாயின் அதற்குப் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. 20ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள ஏனைய சரத்துக்கள் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியும்.
இதன்படி இன்று காலை 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தில் இது தொடர்பான பிரேரணை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இதேநேரம், இம்மாதத்துடன் பதவி காலம் முடிவடையும் மாகாணசபைகளின் நிர்வாகத்தை யாரிடம் கையளிப்பது என்பது தொடர்பாக புதிய பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கும் அரசு ஆராய்ந்து வருகின்றது.
அறிமுகப்படுத்தப்படும் புதிய தேர்தல் முறை மூலம் முஸ்லிம்களுக்கு 3 அல்லது 4 பிரதிநிதிகளே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அரசாங்க முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த புதிய பிரேரணையை தமது கட்சி எதிர்க்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தைக் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேற்றிரவு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். உள்ளூராட்சி தேர்தல் முறையிலும், மாகாணசபை தேர்தல் முறையிலும் தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாக குறையவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் முறையில் கடந்த அரசு அறிமுகப்படுத்தியிருந்த பல அங்கத்தவர் தொகுதியும் இப்போது நீக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருந்தும் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

– சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன்

Comments