இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு எதிராக சட்ட ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும் சபையில் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

எம்.ரீ. ஹைதர் அலி

மியன்மார் நாட்டிலிருந்து அகதிகளாக இலங்கைக்கு வந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய காடையர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சபையின் 86வது மர்வான இறுதி அமர்வு 28.09.2017ஆந்திகதி - வியாழக்கிழமை சபைத் தவிசாளர் கௌரவ சந்திரதாச கலப்பத்தி தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது சமர்பிக்கப்பட்ட அவசர பிரேரனை ஒன்றில் உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து சபையில் உரையாற்றுகையில்...

தங்களது நாட்டில் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் காரணமாக பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்து தங்களின் உடைமைகள், உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் உயிரினை பணயம் வைத்து படகு மூலமாக எமது நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கக்கூடிய சொற்பளவான மியன்மார் அகதிகளின் மீது இந்நாட்டிலுள்ள சில இன வெறியர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டமையானது மனித நேயத்திற்கெதிரான உச்சகட்ட வன்முறையாகும்.

எமது நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய அகதிகள் எந்த மதத்தினை அல்லது எந்த இனத்தினைச் சார்ந்திருந்தாலும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அவர்கள் மனிதர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கான உரிய பாதுகாப்பினையளித்து மனிதாபிமானத்தினை நிலைநாட்ட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

இருந்த போதிலும் அபயமளிக்கப்பட வேண்டிய குறித்த அகதிகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தப்பட்டமையும், அத்தாக்குதலினை நடாத்தியவர்களுக்கு எதிராக உரிய சட்ட ஒழுங்கு நிலை நாட்டப்படாமையும் இந்த நல்லாட்சி அரசாங்கமானது இனவாதத்தினை ஆதரிக்கின்றதா? என்ற சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது. 

எனவே அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இவ்விடயம் தொடர்பாக உடனடி கவனமெடுத்து செயற்படுவதனூடாக சட்டம், ஒழுங்கு, நீதித்துறை என்பவற்றின் சுயாதீனத்தன்மையினை உறுதிப்படுத்துவதோடு குறித்த மக்களுக்கான உரிய பாதுகாப்பினையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சபையில் தெரிவித்தார்.

Comments