உளவு பார்த்த குற்றச்சாட்டு சவூதியில் அறிஞர்கள் கைது
ஹஸன் இக்பால்
சவூதி அரேபியாவில் பிரபல இஸ்லாமிய அறிஞர்கள் உள்ளடங்கலாக சுமார் 20 பேரை அந்நாட்டு அரசு கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவூதியின் மதகுருமார்கள் பலரை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவூதி அரசின் உள்நாட்டு விவகாரம் தொடர்பில் உளவு பார்த்தமை, இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு உட்பட சவூதி அரசினால் “தீவிரவாத அமைப்புக்கள்” என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழுக்களுடன் தொடர்புகளைப் பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே குறித்த உலமாக்கள், இஸ்லாமிய அறிஞர்கள், மதகுருமார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி பாதுகாப்பு தரப்பினர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை சவூதி அரசு மதகுருமார்கள், கல்வியியலாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் உட்பட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக லண்டனை அடிப்படையாக கொண்ட சவூதி மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் முழுவதுமாக வெளியிடப்படவில்லை. எனினும் சல்மான் அல் அவ்தா, அவாத் அல் கர்ணி, பர்ஹான் அல் மாலிகி மற்றும் முஸ்தபா ஹஸன் ஆகிய இஸ்லாமிய அறிஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என சவூதி மனித உரிமை கண்காணிப்பகத்தின் தலைவர் யஹ்யா அல் அஸ்ரி தெரிவித்துள்ளார்.
சுமார் 90,000 உலமாக்களை உறுப்பினர்களாக கொண்ட “சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம்” உலமாக்களின் கைது தொடர்பான சவூதி அரசின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்துள்ளது.
நாடுகளுக்கிடையிலான அரசியல் நெருக்கடிகளில் இஸ்லாமிய அறிஞர்களை பகடைக் காயாக்குவது கூடாது எனவும், கைது செய்யப்பட்டுள்ள சவூதியின் இஸ்லாமிய அறிஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் சவூதி மன்னர் சல்மானிடம் மேற்படி அமைப்பு கோரியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் சல்மான் அல் அவ்தா எனும் இஸ்லாமிய அறிஞர் சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களில் ஒருவராவார் என தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment