“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப விழா நாளை
சிறுவர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்கி, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை மு.ப. 9.00 மணிக்கு திகன, மத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
சிறுவர்கள் மீதான வீட்டு வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், குற்றச்செயல்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட தற்போதைய சிறுவர் சமூகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
சுகாதார கல்வி, உளவியல் ஆலோசனைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக பிள்ளைகளை வலுவூட்டுவதற்கு இச்செயற்திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு வருட காலத்திற்குள் இச்செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதை தடுப்பதற்கான தேசிய கொள்கையொன்றும் இந்த ஆரம்ப நிகழ்வில் வெளியிடப்படவுள்ளதுடன், “எதிர்காலத்தை வெல்லும் பிள்ளைகள்” எனும் பெயரில் பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கான செயற்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


Comments
Post a Comment