ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வும்

எம்.ரீ. ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷன் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகத்துறைக்காக பெரும் பணியாற்றிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் 2017.09.27ஆந்திகதி - புதன்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஷிபா பௌண்டேஷன் நிருவாக சபை உறுப்பினர் நவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம் முழு நேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்கள், கிழக்கு மகாண சபை உறுப்பினரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஷிபா பௌண்டேஷன் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் சின்னம் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் ஊடகவியலாளர்களின் ஊடகப் பங்களிப்பினை பாராட்டும் முகமாக இடம்பெற்ற ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகத்துறைக்காக பெரும் பங்காற்றிய ஊடகவியலாளர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மேலும் கிழக்கு மகாண சபை உறுப்பினரின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களான எம்.ரீ. ஹைதர் அலி, ஏ.எம். சமீம் ஆகியோரும் அதன்போது  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் ஸ்ரீலங்கா ஷிபா பாவுண்டேஷனின் ஊடாக தொடர்ச்சியாக எமது பிரதேசம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை மையப்படுத்தி பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் நாடு பூராகவும் அதன் பணிகளை விஸ்தரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா ஷிபா பௌண்டேஷனின் முதலாவது சேவை ஊடகவியலாளர் கௌரவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.








Comments