மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் (Part-1)

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-

நரகத்திலிருந்து பாதுகாத்தல்
கடைசி வரைக்கும் கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் தான் ஒவ்வொரு கணவனும் மனைவியை கைப்பிடிக்கின்றார். மனைவியின் மீது அன்பு, பாசம் வைத்து சந்தோசமாக வாழ்வதற்கு அனைத்து வழிகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். மனைவியின் கண்ணில் தூசு விழுவதையும் பொறுத்துக் கொள்வதில்லை. மனைவி நோயினால் அவஸ்தைப்படுவதையோ அல்லது வேறு காரணங்களால் துன்பப்படுவதையோ விரும்புவதில்லை. மனைவிக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகுகின்றார்.

மனைவி சுகயீனமுற்றால் குணப் படுத்துவதற்காக பெரும் சிரமப்படுகின்றார். அதற்காக எவ்வளவு பணம் செலவழிப்பதற்கும் தயாராகுகின்றார். சிலநேரம் சொத்துக்களை விற்றாவது காப்பாற்ற முனைகின்றார்.

உலகின் எல்லா தொல்லைகளிலிருந்தும் காப்பாற்ற நினைக்கும் கணவன், தன் அன்புக்குரிய மனைவியை நரகத்திலிருந்து காப்பாற்றவும் தன்னாலான அனைத்து வழிகளையும் மேற் கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான கணவனின் அன்பும் பொறுப்புமாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்தையும் விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்களாகும். அதன் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறுசெய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வர்கள். (66:6)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணியக் கூடியவளாக மனைவியை மாற்றுவது கணவனின் கடமையாகும். முஸ்லிமான முஃமினான, சாலிஹான பெண்ணாக மனைவி அமையும்போதே குடும்ப வாழ்வு அருளுக்குரியதாக மாறிவிடும்.

குடும்ப வாழ்வில் மனைவி சில தவறுகளை விடும்போது அல்லது கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சில குறைகளை விடும் போது கணவன் கோபப்படுவதை விட அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் தவற விடும்போதே கோபப்பட வேண்டும். காரணம் மறுமை வாழ்வில் மனைவியுடன் வாழ்வு மற்றும் பொறுப்புப் பற்றி கணவன் விசாரிக்கப்பட இருக்கிறார்.

கணவன் தன் குடும்பத்தின் மேய்ப்பாளராவார். அவரது மேய்ப்புப் பற்றி (பொறுப்பு) குறித்து விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி.

குடும்ப வாழ்வில் கணவனின் கடமையும் பொறுப்பும் இந்த உலகத்துடன் முடிவடைவதல்ல. அது குறித்த விசாரணை மறுமையுடன் முடிவடை கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கணவன் இபாதத்களில் கவனம் செலுத்துவதுடன் மனைவியையும் இபாதத்களில் ஈடுபடுத்த வேண்டும்.
நபியே! உமது குடும்பத்தாருக்கு தொழுகையைக் கொண்டு ஏவி, நீர் அதில் பொறுமையாகவும் இருப்பீராக. (20:132)

தொழுவது முதல் அனைத்து இபாதத்களிலும் கணவன் முன்மாதிரியாக இருந்து, மனைவியை வழி நடாத்த வேண்டும். இபாதத்களில் முதன்மையாக இருப்பது தொழுகையாகும். மனைவியுடனான தொடர்பும் இந்த வணக்கத்தின் மூலமே வலுப்படுத்த வேண்டும்.

மனைவி இஸ்லாத்தின் வரம்பை மீறும்போது கணவன் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதற்கு இடம்கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வுக்கு மாறு செய்து மனைவியை திருப்திப்படுத்துவதை விட மனைவியுடன் கோபப்பட்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்த வேண்டும்.

குடும்ப வாழ்வில் ஏற்படும் தகராறுகள் பிரச்சினைகள் காரணமாக (அற்பமான காரியங்களுக்காக) மனைவியை விவகாரத்துச் செய்வதை விட அல்லாஹ் ரஸூலுக்கு மாற்றமாக நடக்கும் போதே விவாகரத்து குறித்து முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மனைவியை நரகத்தை விட்டும் காப்பாற்றிக் கொள்ள வழி பிறக்கும்.

Comments